Saturday, August 29, 2020

995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று

995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த துறையூர் சிறப்புமுகாம் திருச்சி காவல் கண்காணிப்பாளாரால் சோதனை செய்யப்பட்டது. இவ்வாறான சோதனை வழக்கமாக மாதக் கடைசியில் நடைபெறுவதுதான் வழக்கம். மாறாக திடீரென இடையில் சோதனை செய்யப்பட்டால் எங்கேயோ ஏதோ பெரிய பிரச்சனை நடந்துவிட்டது என்று அர்த்தம். ஆம். அன்றும் ஜெயா அம்மையாரின் ஆட்சியையே ஆட்டம்காண வைத்த சிறையுடைப்பு சம்பவம் ஒன்று நடந்து விட்டது. அதாவது வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பி விட்டார்கள் என்பதே அந்த சம்பவம். பல நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய பொலிசாரின் 24 மணிநேரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பிவிட்டனர் என்பது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியம் அவர்கள்; சுரங்கம் தோண்டி தப்பிவிட்டனர் என்ற செய்தியாகும். கியூ பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து சென்று சுரங்கத்தை வீடியோ எடுத்து காண்பிக்கும்வரை யாருமே அதை நம்பாமல் இருந்தனர். எனக்கும்கூட எப்படி சுரங்கம் தோண்டியிருப்பார்கள்? எப்படி தப்பியிருப்பார்கள்? யார் யார் தப்பினார்கள்? என்ற கேள்விகள் தோன்றின. அதேவேளை இவ்வாறு தப்பிய புலிகளில் இருவர் சென்னையில் பொலிசார் மறித்து சோதனை செய்தபோது சயனைட் அருந்தி இறந்துவிட்டனர் என்ற செய்தியும் பத்திரிகையில் வந்திருந்தது. நானும் வேலூர் கோட்டையில் ஒரு வருடம் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். எனவே எனக்கு அந்த முகாம் சூழல் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தவர்கள் பலரை எல்லாம் தெரியும். ஆனால் நான் எவ்வளவோ முயன்றும் சிறையுடைப்பு பற்றிய மேலதிக விபரங்களை அப்போது அறிய முடியவில்லை. இந்நிலையில் சிறப்புமுகாம் பற்றிய என் முகநூல் பதிவுகளை படித்துவரும் ஒருவர் ஸ்கொட்லாந்தில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்டார். அவர் தன் உறவினர் பற்றி அறிவதற்காக என்னுடன் தொடர்பு கொணடார். ஆனால் நல்லவேளையாக அவர் மூலமே நான் பல செய்திகளை அறிய முடிந்தது. சென்னையில் பொலிசார் சோதனை செய்தபோது சயனைட் அருந்தி இறந்த இருவரில் ஒருவர் சங்கர். இன்னொருவர் பஞ்சன் என்ற விபரத்தை அவரே கூறினார். இந்த சங்கர் என்பவர் வேலூர் சிறப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு பொறுப்பாக இருந்தவர். இவருக்கு முன்னர் மன்னாரைச் சேர்ந்த அண்ணை என்பவர் இருந்தார். சங்கர் மிகவும் கட்டுப்பாடு நிறைந்தவர். ஆனால் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டு அல்லது எழுதிக் கொண்டிருப்பார். காயம்பட்ட தனது சக போராளிகளின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக என்னுடன் அடிக்கடி உரையாடியிருந்தார். அவருடன் நான் பழகிய நாட்கள் மிகவும் குறைவு. ஆனாலும் மறக்கமுடியாத இனிய நினைவுகள் அவை. மேஜர் தாகூர் / சங்கர் (அழகரட்ணம் இரவீந்திரன் ) அவர்களின் 25ம் ஆண்டு நினைவுதினம் 15.08.2020 அன்று ஆகும். குறிப்பு – தென்னிந்திய திரைப்படத்துறையினர் மயிர்கூச்செறியும் மர்மங்கள் நிறைந்த வேலுர் சிறையுடைப்பை ஏன் இன்னும் படமாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. Image may contain: 1 person

No comments:

Post a Comment