Saturday, August 29, 2020

•லண்டனில் கைகேட் மயானத்தில் அமைந்துள்ள காரல் மாக்ஸ் சமாதி

•லண்டனில் கைகேட் மயானத்தில் அமைந்துள்ள காரல் மாக்ஸ் சமாதி (குறிப்பு - 2013 ம் ஆண்டு இதே நாளில் இப் பதிவை பதிவு செய்ததை முகநூல் நினைவூட்டியுள்ளது. இன்றும் இதில் எழுதப்பட்டுள்ள வரிகள் பொருத்தமாக இருப்பதால் மீள்பதிவு செய்துள்ளேன்.) கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.08.2013)யன்று லண்டனில் கைகேட் மயானத்தில் அமைந்திருக்கும் காரல் மாக்ஸ் சமாதிக்கு சென்றிருந்தேன். கனடாவில் இருந்து வந்திருந்த எனது நண்பர் பார்க்க விரும்பியதால் அவரை அழைத்துச் சென்றேன். நான் ஏற்கனவே பல முறை சென்றிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட ஆட்கள் இல்லாமல் அந்த மயானம் இருந்ததில்லை. அண்மைக்காலமாக மாக்ஸ் சமாதியை பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதை நான் அவதானித்தேன். இம்முறை நானும் நண்பரும் சென்றிருந்த வேளை பின்லாந்தில் இருந்து வந்த ஒரு தாயும் மகளும் மாக்ஸ் சமாதியை அதிக நேரம் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். எனது நண்பர் ஆச்சரியத்தில் அவர்களிடம் “மாக்சியம் காலாவதியாகி விட்டது. மாக்ஸ்ற்கு செல்வாக்கு இல்லை என்று கூறுகிறார்கள். நீங்கள் எதற்காக அங்கிருந்து இங்கு வந்து பார்வையிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த தாய் “அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாக்சை மக்கள் மனங்களில் இருந்து அவர்களால் ஒருபோதும் நீக்க முடிவதில்லை” என்றார். மாக்ஸ் உண்மையாக புதைக்கப்பட்ட இடம் சுமார் 50 அடி தூரம் தள்ளி உள்ளே இருக்கிறது. பார்வையாளர்களின் வசதிக்காக தற்போதைய சமாதி பாதையோரமாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த சமாதிக்கும் சில சமூக விரோதிகளால் 1960களில் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால் சமாதிக்கு சிறிது சேதமே ஏற்பட்டதால் அது பின்னர் புனரமைப்பு செய்து பார்வையாளருக்கு விடப்பட்டுள்ளது. காரல்மாக்ஸ் புதைக்கப்பட்டபோது வெறும் 16 பேரே வந்திருந்தனர். ஆனால் அதன் பின் பல தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். அதிக மக்களை கவர்ந்த தத்துவவாதியாக இன்றும் காரல்மாக்ஸே விளங்குவதாக பி.பி.சி எடுத்;த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பின்குறிப்பு – காரல் மார்க்சுக்கும் அவர் வீட்டில் பணிபுரிந்த பெண்ணிற்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்று மார்க்ஸ் சமாதியை பராமரிக்கும் குழவினர் வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக் குழுவினருடனும் இன்னும் பலருடனும் நான் தொடர்பு கொண்டு ஆய்வு செய்தேன். இது தொடர்பான என் கருத்தை விரைவில் பதிவு செய்கிறேன். Image may contain: 2 people, including Balan Chandran, tree and outdoor

No comments:

Post a Comment