Sunday, August 28, 2022

இவர்கள் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

இவர்கள் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? போராட்டம் நடந்த நாடுகளில் எல்லாம் அந்நாட்டுப் பெண்கள் எப்படி பங்கு பற்றினார்களோ அதே மாதிரித்தான் ஈழப் போராட்டத்திலும் பெண்களின் பங்கு இருக்கிறது. எனவே இதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது என கேட்க தோன்றலாம். ஆம். உண்மைதான். இப்போதும்கூட குர்திஸ் பெண்கள் ஒரு கையில் குழந்தையை ஏந்திக் கொண்டு மறு கையில் துப்பாக்கி ஏந்தி போராடுகிறார்கள்தான். அப்படியென்றால் ஈழத்து தமிழ் பெண்கள் எப்படி இவர்களைவிட பெருமை கொள்ள முடியும்? ஈழத்து பெண்கள் சாதித்தது ஆச்சரியம் இல்லை. அவர்கள் அதனை எத்தகைய சமூக சூழலில் இருந்துவந்து சாதித்தார்கள் என்பதே ஆச்சரியம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தில் எங்களால் படிக்க மட்டுமல்ல துப்பாக்கி ஏந்தி போராடவும் முடியும் என நிரூபித்துக் காட்டியவர்கள். பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் இவர்கள் என்ற கருத்து கொண்ட சமூகத்தில் அதனை உடைத்து ஆண்களே வியக்கும் வண்ணம் சாதித்துக் காட்டியவர்கள். மாதவிடாய் வந்தால் வீட்டின் மூலையில் குந்த வைக்கப்பட்டவர்கள் இவர்கள் ஆனால் போர்க்களத்தில் அதே மாதவிடாயுடன் சாதனை செய்து காட்டியவர்கள். பெண் சயிக்கிள் ஓடினாலே ஆச்சரிமாய் பார்த்த சமூகத்தில் கனரக வாகனங்களை மட்டுமல்ல போர் இயந்திரங்களையே லாவகமாக ஓட்டிக் காட்டியவர்கள். புறநானூற்றில் கூறப்பட்ட பெண்ணின் வீரம் கற்பனை அல்ல அது நிஜம்தான் என்பதை இன்றைய காலத்தில் நேரில் நிரூபித்து காட்டியவர்கள் இவர்கள். எல்லாவற்றையும்விட துரோகி லிஸ்ட்டில் மாத்தையா கருணா என்று ஆண்களின் பெயர்கள்தான் இருக்கிறது. ஆனால் ஒரு பெண் பெயர்கூட இவ்வாறு இடம்பெறவில்லை. அதைவிட யுத்தத்தின் பின்னர்கூட ஆண் போராளிகளைவிட பெண் போராளிகளே அதிக சிரமப்படுகின்றனர். ஆனாலும் இதுவரை ஒரு முன்னாள் பெண் போராளிகூட போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேட்டி கொடுத்ததில்லை. இன்னுமொரு நூறு வருடம் கழித்து இவர்கள் வீரம்கூட கற்பனை என்று கருதும் சமூகம் இருக்கக்கூடும். ஆனாலும் இன்று இவர்கள் தாராளமாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். ஆம். அவர்கள் ஒரு மகத்தான வீரம் செறிந்த வரலாற்றின் சொந்தக்காரர்கள்தான்.

No comments:

Post a Comment