Sunday, August 28, 2022

ஈழத் தமிழருக்கு சீனா உதவுமா?

ஈழத் தமிழருக்கு சீனா உதவுமா? விக்னேஸ்வரனை ஈழத்து தாய்லாமாக பயன்படுத்தி இந்திய உதவியை பெற வேண்டும் என ஒரு ஆய்வாளர் கூறினார். அதற்கு பதிலடியாக சிலர் “ஈழத் தமிழர்கள் இனி சீனாவுடன் பேச வேண்டும். சீனாவின் உதவியை பெற வேண்டும்” என எழுதுகின்றனர். இரண்டுமே தவறான கருத்துகள். ஏனெனில் இந்தியாவும் சீனாவும் இலங்கையில் ஒருமித்தே செயற்படுகின்றன. இரண்டுமே ஈழத் தமிழருக்கு எதிராகவே செயற்படுகின்றன. 1971ல் ஜே.விபி புரட்சி செய்தபோது அதனை அடக்க இந்தியா ராணுவத்தை அனுப்பியது. சீனா ராணுவ தளபாடங்களை வழங்கி உதவியது. அதன்பின்னர் இந்திய அரசு 1987ல் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்தபோது அதனை ஆதரித்து கருத்து வெளியிட்ட முதல் நாடு சீனா ஆகும். அதன் பின்னர் இந்திய ராணுவத்துடன் புலிகள் யுத்தம் செய்த வேளையில்கூட சீனா புலிகளுக்கு உதவவில்லை. மாறாக இலங்கை அரசுக்கே உதவி செய்தது. அதன் பின்னர் 2009ல் இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து தமிழ் மக்களையும் புலிகளையும் அழித்தபோதும் சீனா இலங்கை அரசுக்கே உதவி செய்தது. அதுமட்டுமல்ல இன்றுவரை ஜ.நா வில் இலங்கை அரசை இந்திய அரசு மட்டுமல்ல சீனா அரசும் சேர்ந்தே காப்பாற்றி வருகின்றன. இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் முதலில் இந்தியாவிடமே கேட்கப்பட்டது. இந்தியா வேண்டாம் என்ற பிறகே இந்திய அனுமதியுடனே சீனாவுக்கு வழங்கப்பட்டது. அதே அம்பாந்தோட்டையில் இந்திய தூதரகம் அமைய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அம்பாந்தோட்டை விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் ஒருபகுதி கடன் அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது அக் கடனுக்குரிய வட்டியைக்கூட கட்ட முடியாமல் இந்திய அரசிடம் இலங்கை அரசு உதவி கோருகிறது. எல்லாவற்றையும்விட இதுவரை இலங்கையில் சீனா செய்த முதலீட்டைவிட இந்தியாவிலேதான் அதிக முதலீட்டை செய்துள்ளது. எனவே இலங்கைக்காக இந்தியாவுடன் சீனா ஒருபோதும் முரண்படாது என்ற நிலையில் அதுவும் ஈழத் தமிழருக்கு சீனா உதவும் என நம்புவது முட்டாள்தனம் ஆகும். எனவே சீனாவின் உதவியை ஈழத் தமிழர் பெற வேண்டும் என்று கூறுவதால் ஈழத் தமிழருக்கு எந்த நன்மையும் பயக்காது. மாறாக ஈழத் தமிழரை சீனாவின் கைக்கூலிகள் என்று ஒதுக்குவதற்கே இந்திய அரசுக்கு உதவும். எல்லாவற்றையும்விட உருவாகி வரும் ஈழ மற்றும் தமிழக தமிழர்களின் ஜக்கியத்தைக் குழப்புவதற்கே இது இந்திய அரசுக்கு பெரிதும் உதவும்.

No comments:

Post a Comment