Friday, November 17, 2023

மாலைதீவு சம்பவம்

•மாலைதீவு சம்பவம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? மாலைதீவில் நடந்தது புரட்சி அல்ல. அது எதிர்க்கட்சி தலைவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி. அவர் ஆட்சி அமைத்தால் மாலைதீவை பின்தளமாக பயன்படுத்த தம்மை அனுமதிப்பார் என்ற நம்பிக்கையில் புளட் போராளிகள் உதவி புரிந்தனர். உண்மையில் பளட் இயக்கத்திற்கு முன்னரே இப்படி ஒரு சிந்தனை TEA இயக்க தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு இருந்தது. அவர் மாலைதீவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதனை பின்தளமாக பயன்படுத்த முடியுமா என சிந்தித்தார். மாலைதீவு சம்பவம் நடந்த பின்னர் அவர் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ள தீவு ஒன்றை இவ்வாறு பெற முடியுமா என்று முயற்சி செய்தார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்தியாவை பின்தளமாக தொடர்ந்து பயன்படுத்த போராளி இயக்கங்களால் முடியவில்லை என்பதே. அதனால் அவர்கள் இதற்காக வேறு இடங்களில் முயற்சி செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னரே இந்திய அரசு புலிகளுக்கும் ஈழத் தமிழருக்கும் எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டது என சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே இந்திய அரசு போராளிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தது என்பதற்கு சிறந்த உதாரணம் மாலைதீவு சம்பவம் ஆகும். இந்தியாவில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும்கூட போராளிகள் பின்தளமாக பயன்படுத்த இந்திய அரசு அனுமதிக்காது என்பதற்கும் மாலைதீவு சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் ஆகும். ஏனெனில் மாலைதீவு அரசு இந்திய அரசிடம் உதவி கோராத நிலையிலும் இந்திய அரசு வலியவந்து புளட் போராளிகளை கொன்று ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அடக்கியது. இதற்கு முன்னர் இபிஆர்எல்எவ் இயக்கத்தினர் யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர் இருவரைக் கடத்தியிருந்தனர். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் இந்திராகாந்தி ஜெயவர்த்தனா கோராமலே இபிஆர்எல்எவ் தலைவர்களை பிடித்து சென்னை ஹோட்டல் ஒன்றில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார். ஆனால் இபிஆர்எல்எவ் தலைவர்கள் இன்றும் இந்திய விசுவாசிகளாகவே இருந்து வருகின்றனர். குறிப்பு – இந்தியாவுக்கு எதிராக மாலைதீவில் பின்தளம் அமைக்க முயற்சி செய்து மரணம் அடைந்த புளட் போராளிகளுக்கு எமது அஞ்சலிகள். அவர்கள் தியாகம் என்றும் மதிக்கப்பட வேண்டியதே.

No comments:

Post a Comment