Friday, November 17, 2023

பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்!

•பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்! ஈழத் தமிழர்கள் தமது தொப்புள் கொடி உறவுகள் என்று வெறும் வாய்ப் பேச்சில் அவர்கள் சொல்லி வரவில்லை. உண்மையிலே தங்களால் இயன்றளவு ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் அர்ப்பணித்து வருகிறார்கள். உலகில் எந்தவொரு இனமும் தமிழகம் போல் தன் இனத்திற்கு உதவியிருக்குமா என தேடிப் பார்க்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களின் சேயாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. எம்மவர் சிலர் அவர்கள் மண்ணில் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்கள் ஒருமுறைகூட ஈழ அகதிகள் வெளியேற வேண்டும் என்று கோரவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக தங்க வைத்திருப்பதோடு ரேசனில் உணவுப் பொருட்களும் தந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் ஒரு நேர உணவுக்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள். பெங்களுரில் இருந்து விரட்டப்பட்ட தமது உறவுகளைக்கூட அவர்கள் உரிய முறையில் பராமரிக்கவில்லை ஆனால் எத்தனை இடர் வந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதில் அவர்கள் ஒருபோதும் பின்னின்றதில்லை. அகதிகளை பலவந்தமாக ஜெயா அம்மையார் வெளியேற்ற முனைந்தபோது அதனை வழக்கு போட்டு தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள். அதே ஜெயா அம்மையார் சிறப்புமுகாம் அகதிகளை அந்தமான் சிறைக்கு அனுப்ப முயன்றபோதும் தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது 5000க்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு ஈழத் தமிழன் கூட பாதிக்கப்படாமல் காத்தவர்கள் அவர்கள். ஈழத் தமிழர்களை பாதுகாக்குமாறு கோரி இதுவரை 17 தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்துள்ளனர். பல தமிழக இளைஞர்கள் ஈழத்திற்கே வந்து ஈழத் தமிழர்களுக்காக போராடி இறந்துள்ளனர். சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்ற தனுஸ்கோடி செந்தூரபாண்டியன். அவர் தனது 18 வயதில் 11.11.1993யன்று பலாலி முகாம் தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார். நாளை அவரது 30 வது நினைவு தினம் ஆகும். எமக்காக மரணித்த அந்த சகோதரனை நன்றியுடன் நினைவு கூர்வோம். இங்கு வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள் நன்றி மறந்து “ எங்கட பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? “ என்று தமிழக தமிழர்களிடம் கேட்கிறார்கள். ஆனால் அவர்களோ அப்போதும்கூட கோபம் கொள்வதில்லை. 7கோடி பேர் தாம் அருகில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் தம் உறவுகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டோமே என்றுதான் தலை குனிகிறார்கள். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இனி அடுத்த போராட்டம் தாயும் சேயும் இணைந்தே நடத்தப் போகிறார்கள். அந்த அற்புதத்தை உலக வரலாறு பார்க்கத்தான் போகிறது!

No comments:

Post a Comment