Friday, March 22, 2024

தமிழ்நாட்டில் ஒருநாள் ஒரு ஊரில்

தமிழ்நாட்டில் ஒருநாள் ஒரு ஊரில் பசு மாடு ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இதை கவனித்த கோயில் யானை “ஏன் இந்தளவு வேகமாய் ஓடுகிறாய்?” என கேட்டது. அதற்கு அந்த பசு மாடு “ தெருவில் திரியும் நாய்களை பிடிக்க வண்டியுடன் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்” என்றது. இதைக் கேட்ட யானை ஆச்சரியத்துடன் “ நீதான் நாய் இல்லையே. நீ பசு மாடுதானே? நீ ஏன் ஓடுகிறாய்?” என கேட்டது அதற்கு அந்த பசுமாடு “ நான் பசுமாடுதான். ஆனால் அவர்கள் என்னை பிடித்தால் நான் நாய் இல்லை பசு என்பதை நிரூபிக்க 33 வருடம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் ” என்றது. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓடியது. இது ஒரு நகைச்சுவை கதைதான். ஆனால் இதைவிட நகைச்சுவையானது தமிழ்நாடு பொலிசாரின் நிஜக்கதைகள். இப்போது சாந்தன் இறந்த பின்பு குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை வழக்கில் இணைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபடுகிறது. இதைக் கேட்ட சிலர் இப்படியும் நடக்க முடியுமா என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு தருகிறேன் . தமிழ்நாட்டில் கிருபன் என்பவர் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலம். அவர் மோட்டார் சயிக்கிளில் வருவதாகவும் அவரை கைது செய்யும்படி வயலர்ஸ்சில் பொலிஸ் கமிஷனர் அறிவித்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் ஒருவர் வீதியால் அப்போது மோட்டார் சயிக்கிளில் வந்த ஒரு ஈழத் தமிழரை மறித்தார். அவரிடம் பெயர் என்ன என்று கேட்டபோது அவர் தன் பெயர் நிருபன் என கூறியிருக்கிறார். உடனே அந்த பொலிசார் இவர்தான் அந்த கிருபன் என நினைத்து கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த நிருபன் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஒரு முன்னாள் ரெலோ இயக்க போராளி. அப்போது இவர் இயக்கத்தில் இருந்து விலகி சென்னை திருவொற்றியூரில் பெற்றோல் விற்பனை நிலையம் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். தான் கிருபன் இல்லை, நிருபன் என்று அவர் எவ்வளவோ முறை கூறியும் பொலிசார் அதை கேட்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் உண்மையான கிருபன் கைது செய்யப்பட்ட பின்பும்கூட இவரை பொலிசார் விடுதலை செய்யவில்லை. அதைவிடக் கொடுமை என்னவென்றால் ரெலோ இயக்க போராளியான இவரை புலி இயக்க போராளி என்றுகூறி பல வருடங்களாக சிறையில் அடைத்துவிட்டார்கள். பல வருட சிறை மற்றும் சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்த அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் தற்போது ஜரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார். குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை அடைப்பது, கிருபனுக்கு பதிலா நிருபனை அடைப்பது தமிழக பொலிசாரின் வழமையே.

No comments:

Post a Comment