Sunday, November 29, 2020

•பிக் பாஸ்!

•பிக் பாஸ்! ரஸ்சிய கம்யுனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் அவர்கள் பிக்பாஸ் என்றும் அவருடைய ஆட்சியில் மக்கள் உளவு அமைப்புகளால் எந்நேரமும் கண்காணிக்கப்பட்டார்கள் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கூறிவருகின்றன. இதனால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஆர்வம் இருக்கவில்லை. லண்டன் டிவி ஒன்றில் நடிகை ஷில்பா செட்டி கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்வு ஒன்றே நான் இதுவரை பார்த்த நிகழ்வு. அதுவும் சக வெள்ளைக்கார பெண் போட்டியாளர் ஒருவரால் நிறரீதியாக ஷில்பாசெட்டி விமர்சிக்கப்பட்டமையினால் தவறாது பார்த்தேன். அதில் ஷில்பா செட்டி வெற்றியும் பெற்றார். ஆனால் இவையாவும் நிகழ்ச்சியை பிரபல்யப்படுத்துவதற்காக திட்டமிட்டு ஏற்கனவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்பதை பின்னர் அறிந்ததும் மக்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தேன். இவ்வாறு லண்டனில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இவ் நிகழ்வு தற்போது இந்தியாவில் பல மொழிகளில் அரங்கேறுகிறது. அதுவும் தமிழில் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த வருடம் இரு ஈழத் தமிழர்களையும் போட்டியாளர்களாக பங்குபற்ற வைத்தனர். இம்முறை கோரோனோவினால் ஈழத் தமிழர்கள் எவரையும் பங்குபற்ற வைக்க முடியவில்லை போலும். அதனால் ஈழத் தமிழ் பெண்ணை திருமணம் செய்த ஒருவரை பங்குபற்றவைத்து அதனை நிகழ்வில் கூறுகின்றனர். கடந்தமுறை இரண்டு ஈழத் தமிழர்கள் பங்கு பற்றியிருந்தும் நான் நிகழ்வை பார்க்கவும் இல்லை. யாரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் இம்முறை ஈழத் தமிழ் பெண்ணை திருமணம் செய்த ஆரி என்பவருக்காக நிகழ்வை பார்த்து வருகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் விரும்புகிறேன். ஏனெனில் தான் ஈழத் தமிழ் பெண்ணை திருமணம் செய்ததற்காக தன் வீட்டாரும் தமிழக தமிழனான தன்னை திருமணம் செய்ததால் மனைவியின் வீட்டாரும் தம்மை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆரி கூறியது என் நெஞ்சைத் தொட்டுவிட்டது. எனவே இரு வீட்டாரும் அவர்களை ஏற்றுக்கொள்வதற்காக அவர் நிகழ்வில் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன். அதுமட்டுமன்றி இதுவரை காட்டப்பட்டதில் இருந்து ஆரி அவர்கள் நேர்மையாக விளையாடுவதாகவே தோன்றுகிறது. எனவே ஆரி அவர்களின் வெற்றிக்காக “ஆரி ஆர்மி”யில் நான் ஏன் சேரக்கூடாது? 🙂

No comments:

Post a Comment