Sunday, November 29, 2020

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்

•தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர் இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்! லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது. சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார். இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்.. அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது. இவர் கொல்லப்பட்டபோது இலங்கை அரசு உட்பட பல சர்வதேச நாடுகளும் கண்டித்தன. ஒரு வெளிநாட்டு அமைச்சரை கொன்றது தவறு என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு இறுமாப்பாக கூறியது. இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல. மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே. ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை. சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள். இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள். குறிப்பு - இன்று (02.11.2020) தமிழ்செல்வனின் நினைவுதினம் ஆகும்.

No comments:

Post a Comment