Sunday, November 29, 2020

காவல்துறை உங்கள் நண்பன் (சினிமா)

•காவல்துறை உங்கள் நண்பன் (சினிமா) ஆரம்பம் முதல் இறுதிவரை காவல்துறையின் அராஜகத்தைக் காட்டிவிட்டு அந்த சினிமாவுக்கு காவல்துறை உங்கள் நண்பன் என்று பெயர் வைக்கும் கெத்து வெற்றிமாறனுக்கே உண்டு. முதலில் விசாரணை என்று ஒரு சினிமா எடுத்து காவல்துறையின் முகத்திரையைக் கிழித்தார். இப்போது காவல்துறை உங்கள் நண்பன் என்ற சினிமா மூலம் மீதமிருந்த முகத்தையும் கிழித்து தொங்கவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அதுவும் சினிமாதுறையில் முன்னணியில் இருந்துகொண்டு காவல்துறையின் கோரமுகத்தைக் காட்டுவதற்கு உண்மையில் பெரும் துணிவு வேண்டும். அந்த துணிவு வெற்றிமாறனுக்கு இருப்பதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். 1991ல் ஜெயா அம்மையார் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்படும் ஈழ அகதிகள் மீது நாலு ஜெலட்டின் குச்சிகளை வாங்கி வைத்துவிட்டு ராமேஸ்வரம் பாலத்திற்கு குண்டு வைக்க சதி செய்ததாக பொலிசார் வழக்கு போடுவார்கள். நீதிபதியும் ஏன் பாலத்திற்கு குண்டு வைக்க வேண்டும் என்றோ அல்லது நாலு குச்சினால் பாலத்தை தகர்க்க முடியுமா என்றோ கேட்பதில்லை. மாறாக பொலிசாரின் பொய் வழக்கை அப்படியே ஏற்று அப்பாவி அகதிகளை சிறையில் அடைக்க உத்தரவிடுவார். அப்போதெல்லாம் இந்த பொலிசாரின் கோர முகத்தை மக்களுக்கு எப்படி அறிய வைப்பது என்று சிறையில் இருந்த நான் சிந்தித்ததுண்டு. அதை இப்போது வெற்றிமாறன் நன்கு செய்வதை பார்க்கும்போது திருப்தியாக இருக்கிறது. குறிப்பு – காவல்துறை என்பது அரசின் ஏவல்நாய் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment