Sunday, November 29, 2020

இந்த செய்தி எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

இந்த செய்தி எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஐபிசியைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் இந்த செய்தி வந்ததாக தெரியவில்லை. இந்த செய்தி உண்மையாக இருந்தாலும் ஒரு நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இன்னொரு நாட்டின் அரசு இப்படி வெளிப்படையாக கோர முடியுமா என்றும் தெரியவில்லை. இந்த செய்தி உண்மையானால் அதனால் பிரிட்டனுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ எந்த சங்கடமும் இல்லை. மாறாக இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இப்பவும் சொல்லிக்கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களே சங்கடத்தை எதிர் கொள்வர். ஏனெனில் இனி அவர்களால் எந்த முகத்துடன் மக்களிடம் சென்று இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவப் போகிறது என்று சொல்ல முடியும்? சரி , புலிகளை அழித்துவிட்டதாக கூறிய இலங்கை அரசும் இந்திய அரசும் எதற்காக தொடர்ந்தும் புலிகளை தடை செய்து வருகிறார்கள்? எதற்காக தடை செய்ய வேண்டும் என்று மற்ற நாடுகளை கேட்கிறார்கள்? அவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில் இல்லாத புலிகளுக்கு எதற்கு தடை? சரி தடையை நீக்கிவிட்டால் மீண்டும் உருவாகிவிடுவார்கள் என்று கருதினால் ஜே.வி.பி மீதான தடையை ஏன் நீக்கினார்கள்? ஜே.வி.பி அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்த இலங்கை அரசு, அதன் தலைவர்களை பயங்கரவாதிகள் என்று கொன்ற இலங்கை அரசு இப்போது எப்படி அவர்கள் தடையை நீக்கி இயங்க அனுமதிக்கிறார்கள்? திலீபனை நினைவுகூர தடை விதித்த இலங்கை அரசு இன்று எப்படி ஜே.வி.பி தனது 31வது காhத்திகை வீரர்கள் தினத்தை நினைவுகூர அனுமதி அளித்துள்ளது? ஜே.வி.பி ஒரு சிங்கள அமைப்பு. புலிகள் தமிழ் அமைப்பு என்பதைத்தவிர வேறு என்ன வித்தியாசத்தை இலங்கை அரசு கண்டுள்ளது? இங்கு வேடிக்கை என்னவெனில் சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது ஒரு அமைப்பை தடைசெய்யதால் போராட்டத்தை ஒழித்துவிடலாம் என நினைப்பதாகும். போராடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் பெயர் என்னவைத்தாலும் போராட தமிழ் மக்கள் தயங்கமாட்டார்கள். இந்த உண்மையை இலங்கை இந்திய அரசுகள் விரைவில் உணர்ந்துகொள்ளும்.

No comments:

Post a Comment