Saturday, February 27, 2021

எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது?

•எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது? 32 பேருக்கு நீதிமன்ற தடை உத்தரவு அரசு கொடுத்தது. ஆனால் தடையை மீறி பேரணி தொடர்கிறது. முதல்நாள் பேரணியை தடுக்க முயன்ற பொலிஸ் இரண்டாம் நாள் அதே பேரணிக்கு வேறு வழியின்றி பாதுகாப்பு கொடுக்கும் நிலை. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் ஒன்றாக வருகிறார்கள். இதுவரை எதிர் எதிர் அரசியல் செய்த தலைவர்கள்கூட ஒன்று சேர்ந்து வருகிறார்கள். முஸ்லிம் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். அனைத்து மக்களும் மலையக தமிழ் மக்களின் சம்பள உயர்வுக்கும் குரல் கொடுக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்து தடையை மீறி பேரணி செல்வது கண்டு அரசு பெரும் கலக்கம் அடைந்துள்ளது. ஜ.நா கமிஷன் பேரணியை உற்று நோக்கிக்கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. 2021ல் இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று எந்தவொரு அரசியல் ஆய்வாளரும் கூறவில்லை. எல்லோர் மனதிலும் இப்போது எழும் கேள்வி என்னவெனில் “இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது?” இது வரும் மாகாணசபைத் தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் போடும் நாடகம் என்று சிலர் கூறுகிறார்கள். இது கொழும்பு துறைமுகம் கிடைக்கும்வரை இந்தியா தூண்டிவிடும் செயல் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் இதற்கு காரணமானவர்கள் மக்களே. அவர்களே இதனை நிகழ்த்துகிறார்கள் சரி மக்கள் காரணம் எனில் இதன்மூலம் அவர்கள் சொல்லும் சேதி என்ன என்ற கேள்வி எழுகிறது. முதலாவது, மக்கள் போராட தயாராய் இருக்கிறார்கள். இரண்டாவுது, அவர்கள் ஒன்றிணைந்து போராட தயாராய் இருக்கிறார்கள். அவர்கள் இதனையே தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

No comments:

Post a Comment