Saturday, February 27, 2021

இவர்களுக்கு பின்னால் இந்திய அரசு இருக்கிறதா?

•இவர்களுக்கு பின்னால் இந்திய அரசு இருக்கிறதா? தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பேசும்போது பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை பேரணிக்கு பின்னால் இந்தியா இருப்பதாக கூறினார். அப்படியா? ஏன் அப்படி கூறுகின்றீர்கள்? என ஆச்சரியத்துடன் நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “கொழும்பு துறைமுக யட்டி இந்தியாவுக்கு கிடைக்கும்வரை இனி இப்படி பல போராட்டங்கள் தமிழ் பகுதிகளில் நடக்கும்” என்று கூறினார். அதேபோல் புலம்பெயர் தமிழர் என்ற பேக்ஜடியில் ஒருவர் “ எல்லாம் எழுதியுள்ளீர்கள். ஆனால் இந்த பேரணிக்கு பின்னால் இந்தியா இருப்பதை எழுதாமல் விட்டுவிட்டீர்களே” என்று எனது பதிவு ஒன்றின் கீழ் வந்து எழுதியிருந்தார். அதற்கு நான் “அப்படி நான் கருதவில்லை. உங்களிடம் இதற்கு ஆதாரம் இருந்தால் தாராளமாக முன்வையுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்’ என்றேன். அவர் ஆதாரம் எதையும் முன்வைக்கவில்லை. மாறாக அரசியல் அரிவரி தெரிந்தவர்களுக்கு இது தெரியும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். ஆக, இந்தியா பின்னணியில் இருக்கிறது என்பது இவர்களின ஆதாரம் அற்;ற வெறும் ஊகமாகவே மட்டும் இருப்பதாக கருதவேண்டியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அதை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியும் என்றே பார்க்கும். ஆனால் அதற்காக எல்லாப் பிரச்சனைக்கும் பின்னால் இந்திய அரசே இருப்பதாக கூறிவிட முடியாது. மேலும் இலங்கை அரசை வழிக்கு கொண்டுவர பேரணியை தூண்டிவிட வேண்டும் என்றில்லை. மாறாக எதிர்வரும் ஜ.நா அமர்வில் இலங்கை அரசை காப்பாற்ற முடியாது என்று இந்தியா கூறினாலே போதும் அடுத்த நிமிடம் கோத்தா இந்தியா காலடியில் விழுந்து கிடப்பார். பேரணிக்கு பின்னால் சுமந்திரன் இருக்கிறார் என்று கூறினால் அது எப்படி தவறோ அதே போன்று பேரணிக்கு பின்னால் இந்தியா இருக்கிறது என்று கூறுவதும் தவறாகும். ஏனெனில் இது மக்களால் மக்களுக்காக நடத்தப்பட்ட பேரணி. இதன் வெற்றிக்கு மக்கள் மட்டுமே காரணம் ஆகும். எனவே பேரணியின் பின்னால் இந்தியா இருப்பதாக கூறுவது அந்த மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.

No comments:

Post a Comment