Saturday, February 27, 2021

மூன்று தீவுகளில் காற்றாலை

மூன்று தீவுகளில் காற்றாலை அமைக்கவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே தவிர மூன்று தீவுகளையும் சீனாவுக்கு வழங்கப்படவில்லை. காற்றாலை அமைப்பதால் அத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன தீமை என்று பார்த்து எதிர்;க்க வேண்டுமேயொழிய சீனாக் கம்பனிக்கு கொடுக்கப்பட்டமைக்காக எதிர்க்கக்கூடாது. 1998 ம் ஆண்டு முதல் தீவுப் பகுதிகளில் காற்றாலை அமைத்து அதன்மூலம் மின்சாரம் பெறுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது. சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் இது தொடர்பாக தமிழ்நாட்டில் தூத்துகுடிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை சென்று பார்வையிடவும் திட்டம் இருந்தது . இத் திட்டத்திற்கு இந்தியாவிடமே முதலில் உதவி கோரப்பட்டது. இந்தியா உதவி செய்யாத நிலையிலேயே இந்தியாவுக்கு தெரிந்தே சீனா கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. சீனாக் கம்பனிக்கு வழங்கப்பட்டது குறித்து இந்தியாவே கவலைப்படாத நிலையில் ஈழத் தமிழ் தலைமைகள் எதற்காக இந்தியாவுக்காக கவலைப்பட வேண்டும்? இதேபோன்று சம்பூரில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு இந்திய கம்பனி ஒன்றுக்கு இதே மகிந்தராஜபக்சா 2010ல் அனுமதி வழங்கியிருந்தார். அப்போது இத் திட்டத்தினால் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஆபத்து என்று மக்கள் போராடினார்கள். ஆனால் தமிழர் தலைவரான சம்பந்தர் ஐயா இத் திட்டத்தை எதிர்த்தால் இந்தியா கோபிக்கும். அதனால் தீர்வு கிடைக்காமல் போய்விடும் என்றார். எமது தமிழ் தலைவர்கள் எப்போதும் இந்தியாவின் நலனை கருத்தில் கொள்கிறார்களேயொழிய தமக்கு வோட்டு போட்டு பதவி தந்த தமிழ் மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை. குறிப்பு – மருதங்கேணியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஒரு தமிழ் தலைமை மக்களை தூண்டிவிட்டு நிறுத்தியது. இரணைமடு குளத்தில் இருந்து குடாநாட்டுக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் திட்டத்திற்கு உலகவங்கி நிதி உதவி அளிக்க முன்வந்தும் தமிழ் எம்.பி ஒருவரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment