Monday, March 30, 2015

• தோழர் சண்முகதாசனுடான எனது அனுபவங்கள்

• தோழர் சண்முகதாசனுடான எனது அனுபவங்கள்
இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 22வது நினைவு தினம்.
தோற்றம்- யாழ்ப்பாணத்தில் 03.07.1914 , மறைவு- இங்கிலாந்தில் 08.02.1993
தோழர் சண்முகதாசன் அவர்களுடன் அவருடைய இறுதிக் காலங்களில் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1989ல் எனது நண்பர் வரதராஜன் மற்றும் சீவகன் ஆகியோரின் உதவியுடன் தமிழக நக்சல்பாரி தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரை வீடியோ பேட்டி எடுத்தேன். தமிழீழம் குறித்த எனது கேள்விகள் பலவற்றுக்கு அவர் பொறுமையாக சிறப்பான பதில்களை அளித்தார்.(துரதிருஸ்டவசமாக தற்போது அந்த வீடியோ பிரதி யாரிடமும் இல்லை.)
1990ல் தோழர் சணமுகதாசன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் எழுதிய “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் புத்தகத்தை தமிழ்நாடு அமைப்பு கமிட்டியினரின் “கிளாரா” அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டேன்.
1983ல் இனக் கலவரத்தின் பின் தோழர் சண் வடபகுதிக்கு விஜயம் செய்த போது வடமராச்சியில் எமது தோழர்களுக்கு அரசியல் வகுப்புகள் எடுத்தார். அப்போது எமது கேள்விகள் அனைத்திற்கும் அவர் பொறுமையாக விளக்கம் அளித்தார்.
இயக்கங்கள் எல்லாம் இந்தியாவுக்கு அதிக அளவில் இளைஞர்களை அழைத்து சென்று பயிற்சி வழங்கியபோது 1984 தைப் பொங்கலுக்கு தமிழீழம் பிறக்கும் என்று கூறினார்கள். இது குறித்து தோழர் சண்முகதாசன் அவர்களிடம் கேட்டபோது “இந்தியா ஒருபோதும் தமிழீழம் பெற்று தராது. ஆனால் இந்த இயக்க இளைஞர்கள் எல்லோரும் ஒரு நாள் தங்களுக்கள் அடிபட்டு சாகப் போறாங்கள்” என்றார். அப்போது நாங்கள் அவரைப் பாhத்து சிரித்தோம். ஆனால் இன்று அவர் கூறியதுதான் நடந்திருக்கிறது.
மாபெரும் ஆசான் தோழர் மாசேதுங் அவர்களுடன் பழகும் வாயப்பு எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் தோழர் மாசேதுங் அவர்களுடன் பழகிய தோழர் சண்முகதாசன் அவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எமக்கு கிடைத்தமை உண்மையிலே மிக்க மகிழ்வு அளிக்கிறது.

No comments:

Post a Comment