Saturday, March 30, 2019

சிலர் ஐநா வில் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்கிறார்கள்.

சிலர் ஐநா வில் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்கிறார்கள்.
உண்மைதான்.
இன்னும் சிலர் இதுவரை காலமும் இந்தியாவுடன் பேசி எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள்.
உண்மைதான்.
வேறு சிலர் இனி அமெரிக்காவுடன் பேசினாலும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்கிறார்கள்
உண்மைதான்.
அப்படியென்றால் யாருடன் பேச வேண்டும்?
சிங்கள மக்களுடன் பேச வேண்டும்.
அதாவது ஜநா மட்டுமன்றி இந்தியா அமெரிக்கா என யாருடன் பேசினாலும் சிங்கள மக்களுடன் பேசாமல் எந்த தீர்வையும் பெற முடியாது.
1971லும் 1989லும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.
வெற்றி பெற முடியவில்லை. மாறாக சுமார் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர்.
30 வருடமாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். வெற்றி பெற முடியவில்லை.
மாறாக முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரம் தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு போராட்டங்களில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
முதலாவது,
அறுபதினாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்ற அதே இலங்கை ராணுவம்தான் நாற்பதாயிரம் தமிழர்களையும் கொன்றுள்ளது.
இரண்டாவது,
மாத்தறையில் மன்னம்பேரி என்னும் சிங்கள யுவதியை பாலியல் வல்லறவு செய்து கொன்ற அதே ராணுவம்தான் முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாக்களையும் கொன்றுள்ளது.
மூன்றாவது,
சிங்கள இளைஞர்களை கொன்று குவிக்க உதவிய அதே இந்திய அரசுதான் தமிழ் மக்களையும் கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு உதவியுள்ளது.
நான்காவது,
அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களின் கொலைக்கு எப்படி ஜநா இதுவரை நீதி வழங்கவில்லையோ அப்படியே நாற்பதாயிரம் தமிழ் மக்களின் கொலைக்கும் ஐநா இதுவரை நீதி வழங்கவில்லை.
ஐந்தாவதாக,
இதுதான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. அதாவது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தனித் தனியாக போராடினால் வெற்றி பெற முடியாது.
மாறாக வெற்றி பெற வேண்டுமாயின் இரு இனங்களும் ஜக்கியப்பட்டு போராட வேண்டும்.
தமிழ் இனமும் சிங்கள இனமும் ஜக்கியப்பட்டால் அடுத்த நிமிடமே தாங்கள் தூக்கியெறியப்படுவோம் என்பது சிங்கள தலைமைகளுக்கு மட்டுமல்ல தமிழ் தலைமைகளுக்கும் நன்கு தெரியும்.
எனவே இத் தலைமைகள் இந்திய உதவியுடன் இனங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கி ஜக்கியத்தை தடுத்துக் கொண்டே இருக்கும்.
இதுவரை காலமும் இதையே இவைகள் செய்து கொண்டிருக்கின்றன. இனியும் இதையே இவைகள் செய்யப் போகின்றன.
குறிப்பு – தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அதனால் தமிழ் மக்களுக்கு பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை முதலில் சிங்கள மக்கள் அங்கீகரிக்க வேண்டும். அதன்பின்னரே பிரிந்து போகும் அந்த உரிமையை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கோரமுடியும். இதன் அடிப்படையிலேயே தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் உண்மையான ஜக்கியம் உருவாக முடியும்.
தமிழ் சிங்கள மக்கள் ஒன்றுபட்டு போராடினாலும் வெற்றி பெறுவதற்கு தமிழக மக்களின் ஆதரவு அவசியம். அது ஏன் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment