Wednesday, April 27, 2022

தோழர் மாறனை நினைவு கூருவோம்!

•தோழர் மாறனை நினைவு கூருவோம்! 11.04.2022 தோழர் மாறனின் 34 வது ஆண்டு நினைவு தினம் ஆகும். தோழர் மாறன் சென்னையில் பிறந்தவர். அவர் ஒரு பட்டதாரி. அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டார். இறுதியில் தமிழ் மக்களுக்காக 11.04.1988 யன்று மரணம் அடைந்தார். 1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது. இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது இந்திய அரசின் பொயப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாகவும் இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறக் கோரியும் கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது. அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார். தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார். இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும். தோழர் மாறன் அவர்களுடன் நான் பழகிய நாட்கள் குறைவு. இருப்பினும் அந்த இறுதி நாட்களில் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. அவருடைய தோழமையான உறவு என்றும் மனதில் இருப்பவை. அவை மறக்க முடியாதவை. தியாகி முத்துக்குமாரை அறிந்த அளவிற்கு தோழர் மாறனை ஈழத் தமிழர்கள் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமே. .இனிமேலாவது தோழர் மாறன் அவர்களின் அர்ப்பணிப்பை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். தோழர் மாறன் நினைவை போற்றுவோம். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளை செலுத்துகிறோம்

No comments:

Post a Comment