Saturday, July 16, 2016

தோழர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் “இலங்கை மீதான் இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இலங்கையில் திருகோணமலையைச் சேர்ந்தவரும் மக்கள் விடுதலை முன்னனி (JVP ) உறுப்பினர் தோழர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் “இலங்கை மீதான் இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் அவர்கள் அறிவது.
சம்பூர் அனல் மின் நிலையத்திற்கெதிராக இயங்கிவரும் பலரில் நானும் ஒருவன் என்ற வகையிலும், இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிப்புத் தெரிவித்துப் பல்லாயிரக் கணக்கான தோழர்களை இழந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டு நிலை உறுப்பினர் என்ற வகையிலும் இந்த இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்ற நூல் தொடர்பாகக் கட்டாயமாகக் கருத்துத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.
ஆகையால் எனது கருத்தினை இத்துடன் இணைத்துக் கொள்கின்றேன்.
“இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் அல்லது அடிமைத் தேசம் என்று இந்தியப் பெரு முதலாளிகளின் பொதுப் புத்தியாக மாறி விட்டது. இந்தியாவில் இருந்து இலங்கையைப் பிரிக்கமுடியாது பிரிக்கக் கூடாது என்பது தான் இந்தியாவின் புவியியல் சார்ந்த அரசியல் நிலைப்பாடு. இதில் சிங்களவர் தமிழர் என்ற இன வேறுபாடு இல்லை.”
ஆம். இது உண்மை தான். இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் ஆரம்பமே மிகவும் சரளமான மொழியில் அனைவரும் விளங்கத்தக்கதாகவும், சிறப்பாகவும் காணப்படுகின்றது.
இலங்கையின் அரசியலிலும், பொருளாதாரத்திலும் இந்தியாவின் தலையீடு, அக்கறை என்ற பெயரில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. இது தொன்று தொட்டுக் காணப்படும் விடயமொன்றாகும்.
முதலில், விஜயனுக்கு எவ்வாறு 700 தோழர்கள் இருந்தார்கள் எனத் தெரியவில்லை. அத்துடன் அவர் பயணித்த படகு எவ்வாறு சரியாக மல்வத்து ஓயாவினை அடைந்ததென்றும் புரியவில்லை.
ஆக இலங்கையர்களின், குறிப்பாகச் சிங்கள பௌத்த மக்களின் புனித நூலான மகாவம்சமே இந்திய ஆக்கிரமிப்பின் பலன் போலும்.
அன்று விஜயனும், அதன் பின்னர் வந்த மன்னர்களின் ஆக்கிரமிப்புக்களும், கடைசியாக வந்த இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் வந்த அப்பாவிகளைக் கொன்ற படைகளும் செய்த மனிதாபிமானத்திற்கெதிரான குற்றங்களை நியாயப்படுத்தக் கேள்விகள் ஒரு போதும் எழ முடியாது.
இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் பல்வேறு துறைகளில் காணப்படுகின்றது.
உலகில் எத்தனையோ மகான்களும் போராட்டவீரர்களும் இருந்த பொழுதிலும், அனைத்துத் தமிழ்ப் பிரதேசங்களிலும், காந்தியின் சிலை வைக்கப்பட்டமையும், இந்திய துடுப்பாட்ட அணியை ஆதரிக்கும் இலங்கைத் தமிழ் இளைஞர்களும், நம் நாட்டுப் பாடலென்றால் என்னவென்று தெரியாமல், இந்திய மாயைக்குள் சிக்கித் தவித்து, கொலிவூட் பாடல்களை மட்டும் உச்சரிக்குமொரு சமுதாயமும் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியே.
இதுவும் ஒரு வகையான ஆக்கிரமிப்புத்தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, அனைத்துத் தமிழ் வலதுசாரிக் கட்சிகளும், எந்தவொரு வகையிலாவது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குக்கிணங்கவே இயங்குகின்றன என்பதனை யாராலும் மறுக்க முடியாது. அவர்களுள் அநேகரின் குடும்பத்தினர் வைத்திருக்கும் OCI அட்டைகள் இதற்காகச் சாட்சி சொல்லும்.
இந்தியா என்பது ஒட்டு மொத்த இந்திய மக்களாகாது. அதுமட்டுமல்லாமல் இங்கு தனியே இந்திரா, ராஜீவ், மோடி என்ற பெயர்களை விட, இந்தியப் புலனாய்வுத் துறை என்பதே. அதாவது, பல்வேறு புலனாய்வுத் துறைப் அதிகாரிகள், அந்நிய நாடு விவகாரங்களில் தொன்று தொட்டுச் சிற்பிகளாகவும், பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுபவர்களாகவும் செயற்பட்டு வருகின்றனர். இதன் பிரகாரம், ஒரு மக்கள் புரட்சி வெடித்து, இந்தியா உண்மையான சுதந்திரத்தை எட்டும் வரையில், நாளை வரும் பிரதமரும், நாளை மருனார் வரும் பிரதமரும் இதனையே செய்யப் போகின்றார்கள்.
தெற்கில், 71 இல் மட்டுமல்ல, 80 களின் இறுதிப் பகுதியில் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், வர்க்க விடுதலைக்காகவும் தோழர் ரோகண விஜயவீர தமைமையில் குரல் கொடுத்த பெரும்பான்மையான சிங்களத் தோழர்கள் 70,000 பேரை, ஈவிரக்கமின்றிக் கொளுத்தியது இந்தியாவின் புலனாய்வு.
இதில் என்ன சிறப்பம்சம் என்றால், ஒரு வர்க்க விடுதலைக்கான குரலை, இந்தியாவின் அடிவருடிகளாகச் செயற்பட்ட, அதே வர்க்கத்தைச் சேர்ந்த சில தமிழ் ஆயுதக் குழுக்களைக் கொண்டே PRRA (People’s Revolutionary Red Army) என்னும் துணை இராணுவக் குழுவினை உருவாக்கி, அதற்குள் பல சிங்கள அரசியற் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு, தமைமைப் பதவிகளையும் வழங்கி, தமது தேவைக்காக ஒடுக்கியமையே.
பின்னர், வர்க்க விடுதலைக்காகவும், இந்திய ஆக்கிரமிப்புக்கேதிராகவும் குரல் கொடுத்தவர்களுக்கு இனவாத முலாம் பூசப் பட்டு, தமிழின விரோதிகளாக முத்திரை குற்றி, வரலாறே மாற்றி எழுதப்பட்டது.
அன்று தெற்கில் அந்தக் குழப்பம் ஏற்ப்பட்டிருக்காவிட்டால், இன்றும் எமது வேலிகளுக்கருகே, இந்திய ராணுவம் நின்றிருக்கும்.
இன்றும் எம் சகோதரிகள் மானபங்கப் படுத்தப்பட்டிருப்பார்கள், இன்றும் ஏன் சகோதரனுக்கு மேல் கவச வாகனம் ஏறியிருக்கும்.
ஆயுதக் குழுக்களை உருவாக்கி, அக் குழுக்களையே மோத விடுவதில், அமரிக்கர்களையும், இந்தியர்களையும் விடச் சளைத்தவர்கள் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது.
இது எமது மக்களின் விவகாரத்தில் கண்ணூடாகக் காண முடிந்தது.
இந்திய இராணுவத்தினால் இழைக்கப்பட்ட அநியாயங்களும் அநீதிகள், மீனவர் விவகாரம், அனல் மின் நிலையம், வளங்களின் சுரண்டல், அரசியற் தலையீடு, ETCA ஒப்பந்தம், போன்ற விடயங்கள்சிறப்பாக மேற்கோள் காட்டப்படுள்ள புள்ளி விபரங்களுடன் தர்க்க ரீதியிலான அரசியற் பொருளாதார ஆய்வின் மூலம் இந் நூலின் முக்கியதத்துவமே இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து எப்படி விடுபடுவதென்பதாகும்.
பிரிவினையை மட்டும் வலியுறுத்து, வர்க்க விடுதலை என்றால் என்னவென்று தெரிந்தும், தெரியாமற் காட்டிக்கொண்டு, வர்க்கத்திற்குள்ளேயே விரிசலை ஏற்படுத்தும் பல்வேறு போலி இடதுசாரிகளின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில், “ தமிழ், சிங்கள உழைக்கும் மக்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள புரட்சிகர அமைப்புகளுடனும் ஒன்றுபட்டு, ஜக்கியப்பட்டு போராடுவதன் மூலமே இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட முடியும்.
இலங்கை இனவாத அரசியல் தலைவர்கள் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் என இரு சாராரையும் ஏமாற்றி வருகிறார்கள். இனங்களுக்கிடையே இனவாதத்தைத் தூண்டி, இனங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கி, மக்களைப் பிளவு படுத்தி, முதலாளித்துவ ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கிறார்கள் என்பதை தமிழ் சிங்கள மக்கள் அனைவரும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
பொது எதிரிக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட்டு எல்லா முனைகளிலும் போரிட முன் வர வேண்டும்.
இந்திய ஆக்கிரமிப்பை மட்டுமல்ல அனைத்து ஏகாதிபத்திய ஊடுருவல் களையூம் விரட்டியடிக்காத வரை தமிழ் சிங்கள மக்களுக்கு உண்மையான விடுதலையோ அன்றி சுதந்திரமோ சாத்தியம் இல்லை “ என்று அருமையாக முடித்து வைத்திருக்கின்றார்.
நான் எப்போதும் பலரிடம் கேட்கும் கேள்வி இதுதான். ஒரு மிகச் சிறிய சனத் தொகையைக் கொண்ட கியூபாவிற்கு, பக்கத்து வீட்டுக்காரன் அமரிக்காவின் தாளத்திற்கு ஆடாமல், பொருளாதாரத் தடையையும் தாண்டிச் சாதனைகளையும் சரித்திரத்தையும் படைக்க முடியுமென்றால், எம்மால் ஏன் முடியாது ?
இலங்கையின் இனப் பிரச்சனை தொடார்பாகப் பேச வந்ததாகச் சொல்லப்படும் இந்திய குழுக்களின் எத்தனை விஜயங்கள், பொருளாதார ஒப்பந்தங்களோ, இராணுவ ஒப்பந்தங்களோ கைச்சாத்திடாமல் நிறைவு பெற்றது ?
உண்மையில், தமிழர் உட்பட இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் முதல் எதிரி இந்தியாவே.
எமது நண்பன் யாரென்று அறிய முன்னர், எதிரி யாரென்று அறிய வேண்டும்.
மொத்தத்தில், இந்தியா ஒருபோதும் இலங்கை மக்களின், குறிப்பாகத் தமிழர் விடயத்தில், நியாயமாக நடந்து கொள்ளப் போவதில்லை. இதுதான் வரலாறு.
சிந்தித்துச் செயற்பட வேண்டிய இக்கட்டான இத் தருணத்தில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கெதிரான குரலையும், வர்க்க விடுதலைக்கான இன ஒற்றுமையையும் வலியுறுத்தும் பாலன் தோழர் அவர்களுக்கும், அவரது படைப்பான “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” என்ற ஆவணப் பதிப்பிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருண் ஹேமச்சந்திரா
தேசிய குழு உறுப்பினர் – சோஷலிச இளைஞர் சங்கம்
கூட்டுனர் – கிழக்கு மக்களின் குரல்.
மக்கள் விடுதலை முன்னணி

No comments:

Post a Comment