Saturday, June 30, 2018

•எட்டாப்பழம் நரிகளுக்கு மட்டுமல்ல

•எட்டாப்பழம் நரிகளுக்கு மட்டுமல்ல
வரதராஜப் பெருமாளுக்கும் புளிக்கும்!
திராட்சைப் பழத்தை பறிப்பதற்கு எட்டி எட்டிப் பார்த்த நரி எட்டவில்லை என்றவுடன் இந்தப் பழம் புளிக்கும் என்று கூறிய கதை படித்திருக்கிறோம்.
அதுபோல் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் ஒட்டுவதற்கு முயற்சி செய்த பெருமாள் அது நடக்கவில்லை என்றவுடன் தமிழ்தேசியகூட்டமைப்பு போலித் தேசியம் பேசுவதாக கூறுகிறார்.
தமிழீழம் கிடைக்காமைக்கு காரணம் புலிகளே என்று பெருமாள் கூறுகிறார்.
சரி அப்படியென்றால் கடந்த பத்து வருடங்களாக புலிகள் இல்;லைத்தானே. ஏன் மற்றவர்களால் தமிழீழத்தை எடுக்க முடியவில்லை?
தமிழீழம் உருவாவதை இந்தியாவே பிரதானமாக தடுத்து வருகிறது. இந்த உண்மை பெருமாளுக்கும் தெரியும். அப்படியிருக்க ஏன் புலிகள் மீது பழி போடுகிறார்?
மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் எதையும் செய்யவில்லை என்கிறார்.
உண்மைதான். அதேவேளை பெருமாள் மாகாணசபை முதல்வராக இருந்தபோது சாதித்தது என்ன?
மாகாணசபைக்கு வாங்கில் மேசை கூட வாங்கும் அதிகாரம் இல்லை என்று கூறித்தானே தமிழீழ பிரகடனத்தை பெருமாள் செய்துவிட்டு ஓடினார்.
தான் இந்தியா மூலம் வாங்க முடியாததை இப்ப வந்து விக்னேஸ்வரன் ஏன் வாங்கவில்லை என்று கேட்பது என்ன நியாயம்?
சம்பந்தன், சுமந்திரன் போலி தமிழ் தேசியம் பேசி மக்களை ஏமாற்றுவதாகவும் அவர்களின் தலைமையை மாற்றும்படி கேட்கிறார்.
உண்மைதான். ஆனால் சம்பந்தரின் இடத்தில் யார் இருந்தாலும் ஏன் பெருமாளாகவே இருந்தாலும் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது என்பதுதானே உண்மை.
ஏனெனில் இங்கு பிரச்சனை சம்பந்தர் அல்ல. சம்பந்தர் செல்லும் தேர்தல் பாதையே தீர்வு கிடைக்காமைக்கு காரணம்.
இங்கு முன் வைக்க வேண்டியது சம்பந்தருக்கு மாற்றாக இன்னொருவர் அல்ல. மாறாக சம்பந்தர் முன்னெடுக்கும் தேர்தல் பாதைக்கு மாற்றாக ஒரு மாற்று பாதை.
இது பெருமாளுக்கும் நன்கு தெரியும். அதனால்தான் அறவழியில் தேர்தல் பாதையில் போராடி பயன் கிடைக்காத நிலையில் ஆயுதவழிப் போராட்டத்தை பெருமாளும் அந்த காலத்தில் முன்னெடுத்தார்.
எனவே உண்மையில் தமிழ்தேசியகூட்டமைப்பு அகற்றப்பட வேண்டும் என பெருமாள் விரும்புவார் எனில் அவர் ஒரு மாற்று பாதையை முன் வைக்க வேண்டும்.
அவர் ஒருபோதும் இனி மாற்று பாதையை முன்வைக்க மாட்டார். ஏனெனில் இன்று அவரை அனுப்பி வைத்திருக்கும் இந்திய எஜமான்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் எஜமான் ஆகும்.
என்னதான் இவர்கள் தங்களுக்குள் அடிபட்டாலும் தங்களின் எஜமானின் நலனுக்கு விரோதமாக ஒருபோதும் செயற்பட மாட்டார்கள்.
குறிப்பு- பெருமாளின் பேச்சு கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment