Saturday, June 30, 2018

வெட்கப்பட வேண்டியது தமிழ் தலைவர்களே !

•வெட்கப்பட வேண்டியது
தமிழ் தலைவர்களே !
கிளிநொச்சி ராணுவ அதிகாரி மாற்றம் பெற்று செல்லும்போது தமிழ் மக்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட நிகழ்வு ஊடகங்களில் பரப்பப்படுகிறது.
எந்த ராணுவம் தமிழ் மக்களை கொன்றதோ அதே ராணுவத்திற்கு தமிழ் மக்கள் மாலை மரியாதை செய்து வரவேற்பது வெட்கப்பட வேண்டிய ஒரு செயல்தான்.
இருப்பினும் இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் தமிழ் தலைவர்களே யொழிய தமிழ் மக்கள் அல்ல.
அந்த ராணுவ அதிகாரி தன் சொந்த பணத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்யவில்லை. அரச பணத்தையே வழங்கியிருக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை இருக்கிறது. ஆனாலும் இன்றும்கூட பல பதவிகள் மற்றும் உதவிகள் ராணுவத்தினூடாகவே வழங்கப்படுகிறது.
ஒரு ராணுவஅதிகாரியை நல்லவராக காட்டுவதன் மூலம் மொத்த ராணுவத்தையும் நல்லதாக காட்ட முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் அரசின் ஏவல்நாயாக அதன் வன்முறைக் கருவியாக ராணுவம் இருக்கும்வரை அது மக்களுக்கு நல்ல ராணுவமாக ஒருபோதும் இருக்க முடியாது.
எமது தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் மக்களுக்காக செயற்பட்டிருந்தால் மக்கள் ராணுவ அதிகாரியை வரவேற்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதே கிளிநொச்சி தொகுதிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.
இவர் தனக்கு 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் பெற்றார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் சொகுசு பங்களா வாங்கி பிள்ளைகளை படிக்க வைத்தார்.
இத்தனைக்கும் நடுவில் இவர் அரசிடம் வைத்த கோரிக்கை கிளிநொச்சியில் சாராய பார் திறக்க வேண்டும் என்பதே.
ஒரு ராணுவ அதிகாரி முன்னாள் போராளிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்கிறார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பி சாராயக்கடை திறக்க வேண்டும் என்கிறார்.
இப்போது சொல்லுங்கள். மக்கள் ராணுவ அதிகாரிக்கு மாலை போட்டதில் யார் வெட்கப்பட வேண்டும்?

No comments:

Post a Comment