Thursday, November 29, 2018

புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் தம் உறவுகளுக்காக குரல் கொடுப்பது தவறா?

•புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள்
தம் உறவுகளுக்காக குரல் கொடுப்பது தவறா?
ஈழத் தமிழர்கள் போன்று யூத இன மக்களும் அகதிகளாக பல நாடுகளில் வாழ்ந்தார்கள்.
பல நாடுகளில் அகதிகளாக அவர்கள் வாழ்ந்து வந்தபோதும் தமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற பொதுவான எண்ணம் அவர்களுக்கு இருந்தது.
தமக்கு ஒரு நாடு வேண்டும் என்று அவர்கள் அனைவரும் போராடி வந்ததால்தான் அவர்களால் இஸ்ரவேல் என்று ஒரு நாட்டை அடைய முடிந்தது.
அன்று அகதிகளாக வாழ்ந்த யூதர்களால் ஒரு நாட்டை அடைய முடிந்தது என்றால் இன்று அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களால் ஏன் விடுதலையை பெற முடியவில்லை?
இதற்கு பல காரணங்களும் சூழ்நிலைகளும் இருந்தாலும் மிக முக்கிய காரணம் எந்தவொரு யூதனும் போராடும் யூதனைப் பார்த்து “இஸ்ரேலில் வந்து போராடு” என்று கூறவில்லை.
ஆனால் ஈழத் தமிழர்களில்தான் “ தைரியமான ஆள் என்றால் இலங்கையில் வந்து போராடு” என்று முகநூலில் சவால் விட்டு எழுதும் புத்திசாலிகள்(?); இருக்கிறார்கள்
புலம்பெயர் தமிழன் ஈழத்தில் பாடசாலை கட்ட பணம் கொடுக்கிறான்
புலம்பெயர் தமிழன் ஈழத்தில் கோயில் கட்ட பணம் கொடுக்கிறான்
புலம்பெயர் தமிழன் ஈழத்தில் மருத்துவமனை கட்ட பணம் கொடுக்கிறான்
புலம்பெயர் தமிழன் வறிய மக்களுக்கு பொருளாதார உதவி செய்கிறான்
புலம்பெயர் தமிழன் முன்னாள் போராளிகளுக்கும் உதவி செய்கிறான்
இவ்வாறு புலம்பெயர் தமிழன் பல உதவிகளை செய்யும்போது இலங்கையில் வந்து செய் என்று கூறாதவர்கள், புலம்பெயர் தமிழன் அரசியல் கருத்தை தெரிவித்தவுடன் “இலங்கையில் வந்து போராடு” என்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்ட எமது தமிழ் இனம் இந்தளவு விரைவாக மீண்டும் எழுந்து நிற்கிறது என்றால் அது புலம்பெயர் தமிழர்களின் அளவில்லா உதவியும் மகத்தான அர்ப்பணிப்பும் இன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
அடுத்த கட்ட போராட்டத்தை புலம்பெயர் தமிழர்களே முன்னெடுக்க வேண்டும் என முதன் முதலில் கூறியவர்கள் புலிகளே. ஆம். இது ஒரு சரியான கணிப்புதான்.
அதேபோன்று போராடும் புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் வந்து போராடும்படி முதன் முதலில் அழைப்பு விடுத்தவர் கோத்தபாய ராஜபக்சதான்.
கோத்தபாயாவின் அழைப்பை எம்மால் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அவர் வெள்ளை வானில் எற்றி கொல்வதற்காகவே அவ்வாறு அழைப்பு விடுத்தார்.
ஆனால் அதன்பின்பு அதே அழைப்பை சுமந்திரன் நக்கலாக விடுத்தார். பாவம். இப்போது அவரே சிங்கள பொலிஸ் பாதுகாப்பு இன்றி தமிழர் பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்.
இன்று புலம்பெயர் நாடுகளில் சுமார் 7 லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த 7 லட்சம் தமிழர்களும் ஈழத்தில் வந்துதான் அரசியல் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கோருவது,
முதலாவதாக, அந்த 7 லட்சம் தமிழர்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதற்கு ஒப்பாகும்.
இரண்டாவதாக, இது கோத்தபாயாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருக்கிறது
மூன்றாவதாக, இது போhராட்டம் என்றால் ஈழ மண்ணில் மட்டும்தான் நடத்த வேண்டும் என்ற முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
நான்காவதாக, மொத்தத்தில் இது தமிழ் மக்களின் நலனில் இருந்து கூறப்படவில்லை. மாறாக இலங்கை இந்திய அரசுகளிpன் நலனுக்காக கூறப்படுகின்றது என்று அர்த்தமாகும்.
அண்மையில் சீக்கிய மக்கள் லண்டனில் ஒரு ஒன்றுகூடலை நடத்தியிருந்தார்கள். 2020ல் காலிஸ்தானுக்காக வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இது நடக்குமா நடக்காதா என்பதற்கு அப்பால் மிக முக்கியமான ஒரு விடயத்தை ஈழத் தமிழர்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது ஒரு சீக்கியன்கூட இதுவரை இவர்களைப் பார்த்து “தைரியம் இருந்தால் இந்தியா வந்து போராடு” என்று எழுதவில்லை.
இவ்வாறு இவர்கள் ஒற்றுமையாக இருப்பதால்தான் நடந்த சீக்கிய படுகொலைகளுக்காக பிரதமர் மோடி அவர்களிடம் தவிர்க்க முடியாமல் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி ஈழத் தமிழரிடம் இதுவரை மன்னிப்பு கேட்காமைக்கு காரணம் “இந்திய ராணுவம் அப்பாவி மக்களை கொல்லவில்லை. புலிகளைத்தான் கொன்றது” என்று எழுதும் சிலர் நம்மிடையே இருப்பதுதான்.
புலம்பெயர் தமிழர்கள் போராடுவது இலங்கை அரசுக்குத்தானே எரிச்சல் கொடுக்க வேண்டும். ஏன் இந்திய உளவுப்படைகளுக்கு கொடுக்கிறது என அப்பாவியாய் சிலர் கேட்கிறார்கள்.
புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழக தமிழர்களும் இப்போது ஒன்று சேர்ந்து போராட ஆரம்பித்துள்ளார்கள். இதுவே இந்திய உளவுப்படைகளுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது.
ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராடினால் தமிழ் இனம் விடுதலை பெற்றுவிடும் என்பது மட்டுமல்ல இந்தியாவே சுக்கு நூறாக உடைந்துவிடும் என்று இந்திய உளவுப்படை அச்சப்படுகிறது.
எனவேதான் பல்வேறு வழிகளில் இலங்கை இந்திய உளவுப்படையினர் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை நசுக்க முனைகின்றனர்.
“இலங்கையில் வந்து போராடு” என்று எழுதுவோரின் வேர்களை ஆராய்ந்தால் அவை இவ் உளவுப்படைகளில் இருந்தே வருவதை நாம் நன்கு கண்டு கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் உலகத்தில் யாரும் எங்கிருந்தும் போராடலாம். இதைக்கூட உணர்ந்து கொள்ளாமல் முட்டாள்தனமாக “இலங்கையில் வந்து போராடு” என்று எழுதுபவர்களை என்னவென்று அழைப்பது?
குறிப்பு- கணவான்களே கூறுங்கள்!
ஒவ்வொரு வருடமும் ஜெனிவா வந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த வெள்ள இனப் பெண்மணியும் இலங்கையில் வந்துதான் குரல் கொடுக்க வேண்டுமா?

No comments:

Post a Comment