Thursday, November 29, 2018

குரங்கு கையில் கொடுத்த பூ மாலையும்

•குரங்கு கையில் கொடுத்த பூ மாலையும்
மைத்திரி கையில் கொடுத்த ஜனாதிபதி பதவியும்
குரங்கு கையில் பூ மாலையை கொடுத்துவிட்டு அது மாலையை பிய்க்குது, அறுக்குது என்று புலம்பவது எப்படி அர்த்த மற்றதோ,
அதே போன்று மைத்திரியின் கையில் ஜனாதிபதி பதவியைக் கொடுத்து விட்டு அவர் பிரதமரை மாற்றுகிறார், பாராளுமன்றத்தை கலைக்கிறார் என்று புலம்புவதும் அர்த்த மற்றதாகும்.
மைத்திரி மகிந்தவுக்கு பிரதமர் பதவியை கொடுத்தார். அவர் ஒரு எம்.பிக்கு 50 கோடி ரூபா வழங்க முன்வந்தும் தேவையான பெரும்பான்மையை பெற முடியவில்லை.
எனவே (குரங்கு) மைத்திரி வேறு வழியின்றி (மாலையை) பாராளுமன்றத்தை கலைத்துவிட்டார்.
இப்போது எல்லோரும் மைத்திரி ஜனநாயகத்தை கொன்று புதைத்து விட்டார் என்று ஒப்பாரி வைக்கிறார்களே யொழிய மைத்திரி மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றியது குறித்து அக்கறை கொள்ளவில்லை.
கடந்த 2015 தேர்தலுக்கு 1280 மில்லியன் ரூபா செலவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் இனி அடுத்த தேர்தலுக்கு குறைந்தது 1500 மில்லியன் ரூபா செலவாகவுள்ளது.
பாராளுமன்றம் முறைப்படி 2020ல் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மைத்திரியின் பொறுப்பற்ற செயலால் இச் செலவு இப்போது மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையின் மொத்த கடன் 10313 பில்லியன் ரூபா என்று நிதி அமைச்சர் கூறினார். ஆனால் இது பொய் என்றும் உண்மையான கடன் தொகை 10702 பில்லியன் ரூபா என ஆடிட்டர் ஜெனரல் கூறுகிறார்.
பிரதமர் ரணில் டில்லி சென்ற போது இலங்கையின் மொத்த கடன் தொகை தனக்கு தெரியாது என்று பத்திரிகை பேட்டியொன்றில் கூறினார். நிதியமைச்சரோ 389 பில்லியன் ரூபா தவறாக கணக்கு சொல்கிறார்.
இன்று இலங்கை குடிமகன் ஒவ்வொருவர்; தலையிலும் 417913 ரூபா கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமார் நான்கு லட்சம் ரூபா கடனுடனே பிறக்கிறது.
கடன் வாங்குவது தவறு அல்ல. ஆனால் அது பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவ்வாறு இல்லை.
இலங்கையின் GDP growth rate 3.1 % என நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் உண்மையில் இது 2.7% என்று ஆடிட்டர் ஜெனரல் கூறுகிறார்.
வருமானத்தில் 70.1 வீதம் கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே போய்விடுகிறது. இதனால் எந்தவொரு அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாத நிலை.
எனவேதான் மகிந்த அரசானாலும் சரி அல்லது ரணில் அரசானாலும் சரி ஒருபுறம் அரசுக்கு சொந்தமான சொத்துகளை தனியாருக்கு விற்கின்றனர். மறுபுறம் நாட்டின் வளங்களை சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு தாரை வார்க்கின்றன.
மைத்திரி பதவியேற்றபோது செலவு வெறும் ஜயாயிரம் ரூபா என கூறப்பட்டது. அவர் செருப்புடனே நடந்து திரிகிறார். அவர் தனது வீட்டு சாப்பாட்டை கொண்டு வந்து தானே தன் கையால் சாப்பிடுகிறார் என்று எல்லாம் கூறி அவரை எளிய ஜனாதிபதி என்றார்கள்.
அந்த எளிய ஜனாதிபதி தன் மகளுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சாராய பார்லைசென்சுகளை வழங்கியிருப்பதாக இப்போது அறிகிறோம். அதுமட்டுமல்ல இந்த எளிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தலா 16 கோடி ரூபாவுக்கு குண்டு துளைக்காத கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு வேடிக்கை என்னவெனில் பிரதமர் ரணில் தனது அலரி மாளிகையில் இருந்து அருகில் இருக்கும் பாராளுமன்றத்திற்கு ஹெலிகெப்டரில்தான் சென்று வருகிறார். இருந்தும் அவருக்கும் 16 கோடி ரூபாவுக்கு சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச, ரணில், மைத்திரி இவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் மீது எவருக்குமே அக்கறை இல்லை. இவர்களுடைய அக்கறை எல்லாம் பதவி, ஊழல், லஞ்சம்தான்.

No comments:

Post a Comment