Thursday, November 29, 2018

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர் இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்!

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்
இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்!
• இரண்டு பேர்கள்
லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. ஆனால் இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது.
இவர் பல நாடுகள் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கு முன் நின்று உழைத்தவர். அதுமட்டுமல்ல சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தியவர். சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் பொய் சொன்னவர்.
தமிழ்செல்வன்- இவர் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். இவரே புலிகள் தரப்பிற்கு தலைமை தாங்கி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டவர். புலிகள் இயக்கத்தை தடை செய்த நாடுகள்கூட அரசியல்துறை பொறுப்பாளர் என்ற ரீதியில் இவருடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.
• இரண்டு கொலைகள்
லக்ஸ்மன் கதிர்காமர் தனது வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை தொர்பாக கைது செய்யப்பட்ட நபர் 19 வருட சிறைவாசத்தின் பின் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனக்கூறி நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு கூறியது.
• இரண்டு நியாயங்கள்.
இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல. மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே.
ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமல் கொல்லப்ட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை.
இதை நான் கேட்டால் உடனே ஒரு கூட்டம் “பாலன்தோழர் நன்றாய் புலி வால் பிடிக்கிறார்” என்று பதில் எழுதுவார்கள். நான் கேட்கும் கேள்விக்கு இது உரிய பதில் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களிடம் பதில் இல்லாததால்தான் இப்படி எனக்கு புலி முத்திரை குத்துகிறார்கள் என்பது எனக்கும் தெரியும்.
இன்னும் சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள்.
இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள்.

No comments:

Post a Comment