Thursday, November 29, 2018

சிறுத்தை பதுங்கிறதா? அல்லது பாய்கிறதா?

சிறுத்தை பதுங்கிறதா?
அல்லது பாய்கிறதா?
விடுதலைப் புலிகளைப் பார்த்து தன் கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் என பெயர் வைத்தவர் திருமாவளவன்.
விடுதலைப் புலிகள் போல் அவர் பாயவில்லை என்றாலும் ஆரம்பத்தில் நன்றாக உறுமினார்.
1994ம் ஆண்டு நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலுர் சிறப்பு முகாம் முன்பு கூட்டம் போட்ட திருமா “ சிறப்புமுகாம்களை தமிழக அரசு மூட வில்லை என்றால் அதனை உடைத்து தகர்ப்போம்” என்று உறுமினார்.
அதுமட்டுமல்ல, நான் அறிந்தவரையில் முதன்முதலாக “தோழர் தமிழரசன் பயங்கரவாதி இல்லை. அவர் ஒரு தமிழ் தேசிய போராளி” என்று பகிரங்கமாக மேடையில் பேசிய தலைவரும் இவரே.
“சாதி விடுதலை அடைந்த பின்பே தமிழின விடுதலை அடைய முடியும்” என தமிழகத்தில் கூறிவரும் திருமா அவர்கள், முதன் முதலாக யாழ்ப்பாணம் போனபோது “தமிழீழ விடுதலை அடைந்த பின்பு சாதி விடுதலை அடைய முடியும்” என்றார்.
புலிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருவதால் அவர்களுக்கு சங்கடம் தரும் வகையில் தன் கருத்துகள் இடம்பெறக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என பலர் அப்போது கருதினர்.
ஆனால் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தவுடன் இலங்கை வந்து மகிந்தவின் ரத்தம் தோய்ந்த கைகளை இவர் குலுக்குவார் என யாருமே எதிர் பார்க்கவில்லை.
இப்போது அவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். யாழ்ப்பாணம் வந்தவர் இம்முறையாவது கரவெட்டி வந்து சாதிப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் சிலைகளை பார்வையிட்டிருக்கலாம்.
இந்தியாவில் அம்பேத்கார் சிலைகள் உடைக்கப்படுவதுபோல் கரவெட்டியில் அமைக்கப்பட்ட சிலைகளும் உடைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சிலையை பார்வையிட்டு அவை புனரமைக்கப்படுவதற்காவது அவர் குரல் கொடுத்திருக்கலாம்.
அல்லது, மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே மாதத்தில் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்து தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியிருக்கலாம்.
ஏனெனில், தமிழகத்தில் பேரறிவாளன் விடுதலைக்காக உயிர் துறந்த செங்கொடிக்கு வருடம்தோறும் நினைவு கூறிவருபவர் இவர். எனவே மாணவன் செந்தூரனையும் அவர் நினைவு கூர்ந்திருக்க முடியும்.
ஆனால் அவரோ இந்திய உளவுப்படையால் அனுப்பி வைக்கப்பட்ட சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தை அல்லவா சந்தித்திருக்கிறார்.
எதற்காக இந்த துரோக அரசியலை திருமா மேற்கொள்கிறார்?

No comments:

Post a Comment