Thursday, November 29, 2018

•ஈழத் தமிழா!

•ஈழத் தமிழா!
மடிந்த மாவீரர்கள்
எமக்காக ஏங்கினார்கள்
எமக்காக போராடினார்கள்
இறுதிவரை உறுதிமாறாமல்
எமக்காகவே இறந்தார்கள்
எம் தமிழ் மொழிக்காகவும்
எம் தமிழ் இனத்திற்காகவும்
எம் தமிழ் மண்ணிற்காகவும்
தொடர்ந்து இயங்கினார்களே.
இன்று நாம் இயங்க வேண்டாமா?
மயங்கியும் தயங்கியும்
அலைந்தும் குலைந்தும்
நிலையில்லாது இயங்கும் நாம்
நமக்காக
நம்மவருக்காக
நம்முடையதற்காக
இயங்க வேண்டாமா?
அதற்கென நாம்
இணைய வேண்டாமா?
அதற்குரிய உறுதியை
அதற்குரிய சூழினை
இன்று நாம் எம் உள்ளத்தில்
மேற்கொள்ள வேண்டாமா?
அவ் உறுதிக்குரிய வல்லுணர்வினை
மாவீரர்களின் நினைவுகளில் இருந்து பெறுவோமாக
அதன்வழி நாம் பெருமையும் உறுவோமாக
முதலில் உரிமைகளை இழந்தோம்
பின்னர் உடமைகளை இழந்தோம்
இறுதியாக உயிர்களை இழந்தோம்
ஆனால் உணர்வுகளை இழக்கவில்லையே
மீண்டும் எழுவோம்
முன்னைவிட வலிமையாக எழுவோம்
என்று கூறியதும் ஓடிவந்து
வேண்டாம் இன்னொரு போர் என்பர்
புலிகளாலேயே முடியவில்லை என்பர்
இனி யாரால்தான் முடியும் என்றும் கேட்பர்
புலிகள்போல் மீண்டும் வரமுடியாமல் போகலாம்
ஆனால் புலிகளைவிட அதிக தூரம்
நிச்சயம் எம்மால் பார்க்க முடியும்
ஏனெனில்,
எமக்காக மாண்டவர்கள்
தங்கள் தோள்களில் அல்லவா
எம்மை தாங்கி நிற்கின்றனர்
என்னபடி நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்டாலும்
தாம் சொன்னபடி எதுவும் தராமல் ஏமாற்றுவதையே
முதற்படியாய் கொண்டுவிட்டனர் நல்லாட்சி அரசினர்
அவர்தம் காலடியை நக்கியே நம் தலைவர்கள்
அடி பணிந்து இருக்கின்றனர் - தமிழா!
இன்னும் இன்னபடி நீ வீழ்ந்து கிடந்தால்
எப்படித்தான் மேற்படியை எட்டுவாயோ?
எத்தனை நாள் எத்தனை ஆண்டு
எத்தனை பேர் எத்தனை போர்
எத்தனை தோள் திரண்டு எழுவதோ
எத்தனை பேச்சு எத்தனை பாட்டு
எத்தனைதாம் எழுதிக் குவிப்பதோ
எத்தனை நாள் நாம் பொறுப்பது
எத்தனை பேர் நாம் இறப்பது
எத்தனைநாள் இன்னும் நாம்
அடிமையாக கிடப்பதோ?
எமது மொழி எமது இனம் எமது மண்
மீட்பதற்கு நாமே சோர்ந்து போனால்
பின் யார்தான் முன்வருவர் எமக்காக
எம் இனம் இன்று தாழ்வுற்றுக் கிடக்கிறது
சிந்தனைத் திறன் இல்லாது சீரழிந்து குலைகிறது
பிறர் இதை எடுத்துச்சொன்னாலும்
உணர்வு பெறாமலே இருக்கிறது
எவ்வளவுதான் உருகி உருகி எடுத்து கூறினாலும்
செயல்படாது அடிமையாய் பணிந்து கிடக்கிறது
தமிழர் தலைமையோ பதவி நலன்களுக்காக
நம் பகைவனிடம் அண்டிப் பிழைக்கின்றது
அண்டிப்பிழைக்கும் தலைமையிடம்
இன் சொல்லால் சொன்னோம்
எரிச்சலுடனும் கூறியுள்ளோம்
புண் சொல்லும் வீசினோம்
புண்படவும் சொல்லிவிட்டோம்
என்னவகை சொன்னாலும் அவர் தம் உடலில்
சின்னதொரு மாற்றமும் இன்னும் ஏற்படவில்லையே
தம்மை எமது தலைவர்கள் என்றார்கள்
எம் மத்தியில் வருவதற்கு அவர்களுக்கு
சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்
5 கோடி ரூபா சொகுசு வாகனம் வேண்டும்
கொழும்பில் சொகுசு பங்களா வேண்டும்
தேர்தலில் தம்மை தெரிவு செய்தால்
ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார்கள்
அவர்களுக்கு எல்லாம் வந்தது - ஆனால்
எமக்குத்தான் ஒரு ம- - ம் வரவில்லையே!
மகிந்த கும்பல் வந்தார்கள்
வடக்கில் வசந்தம் என்றார்கள்
கிழக்கில் உதயம் என்றார்கள்
மைத்திரியும் ரணிலும் வந்தார்கள்
நாடு முழுவதும் நல்லாட்சி என்றார்கள்
யுத்தம் முடிந்து 9 வருடமாச்சு
காணாமல் போனோர் இன்னும்
கண்டு பிடிக்கப்படவில்லை
இடம்பெயர்ந்தோர் இன்னும்
மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை
அரசியல் கைதிகள் இன்னும்
விடுதலை செய்யப்படவில்லை
ஆனால்,
கிழக்கில் சிங்கள குடியேற்றம்
வடக்கில் பௌத்த விகாரைகள்
நாளுக்கு நாள் அரங்கேறுது
ஒருபுறம் சிங்கள ஆக்கிரமிப்பு
மறுபுறம் இந்திய ஆக்கிரமிப்பு
தமிழன் தன் மண்ணில் நீட்டி நிமிர்ந்து
நிம்மதியாக உறங்க முடியவில்லையே
ஏய் தமிழா!
அன்று ஒரு பெரு நிலம்
உனக்கிருந்தது அறிவாயோ
இன்று அரைக் காணி நிலத்திற்கு
வேலிச் சண்டை போடுகிறாயே
எல்லா இனமும் தாய் மொழியில் பேசும்
நீ பேசுவது மொழிகளின் தாய் மொழியில்
என்பதையாவது நீ அறிவாயோ?
நீ வீழ்ந்து கிடப்பது
எதிரியின் பலத்தால் அல்ல
உன் பலத்தை அறியாததால்
தன் பலம் அறியாமல் யானை
கோவில் வாசலில் பிச்சை எடுப்பதுபோல்
உன் பலம் அறியாமல்
அடிமையாக வீழ்ந்து கிடக்கிறாய்
போர்த்துக்கேயரை விரட்டியவன் நீ
ஒல்லாந்தரை விரட்டியவன் நீ
ஆங்கிலேயரை விரட்டியவன் நீ
ஆக்கிரமிப்பாளர்கள் எல்லாரையும் விரட்டிய
வீரம் செறிந்த வரலாற்றைக் கொண்டவன் நீ.
ஆனால் இன்று,
பல்லி சொல்லுக்கு பலன் அறிய
பஞ்சாங்கத்தை தேடிக்கொண்டிருக்கிறாயே?
குட்டக் குட்டக் குனிந்துகொடுக்கும் முட்டாள் தமிழனே
மூடப் பிறவியே ஒன்று கேள் நீ ஒரு ஊமைப் பிறவியல்லன்
தொன்று தொட்டு தொழும் அடிமைப் பிறவியும் அல்லன்
அன்று உன் கொடி உன் மண்ணில் நிமிர்ந்து பறந்ததே
இன்று உன் தலை குனிந்து தாழ்ந்து கிடக்கிறதே
ஏய் தமிழா!
எந்த நிலை வரினும் ஏற்றம் தளரோம் நாம்
சோர்வுற்றபோது மாவீரரை நினைத்தெழுவோம்
என்ன துயர் வரினும் ஏற்ற பணி முடிப்போம்
அன்னை தமிழ் மீது அருஞ்சூழ் உரைத் தெழுவோம்
துரோகிகள் எமை தாழ்த்தி வீழ்த்திடினும்
எம் இனத்திற்கு உழைப்பதே கொள்கை என்போம்
இலங்கை அரசால் செத்தாலும் இந்திய அரசால் செத்தாலும்
தமிழ் இன விடுதலை ஒன்றே நம் இலக்கு என்போம்
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ்வோம்
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ் பொருட்டே ஆவோம்
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வோம்
தனியேதான் நின்றாலும் எம் கொள்கையில் மாற மாட்டோம்
சூழ்ந்தாலும் தமிழ் சுற்றம் சூழ்ந்து உரிமை கேட்போம்
சூழ்ச்சியினால் எம் உடலை கூறாக்கினாலும் முடிவு அந்த முடிவே
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்கள் எல்லாம் அதுவே!

No comments:

Post a Comment