Thursday, November 29, 2018

தம்பி செந்தூரா! எங்களை மன்னித்துவிடு!

•தம்பி செந்தூரா!
எங்களை மன்னித்துவிடு!
நீ தலை வைத்து உயிர் விட்ட தண்டவாளத்தில்
இப்போதும் ரயில்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
நீ விரும்பிய கைதிகள் விடுதலை பெற்று
அதில் வருவார்களா என நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
எமது தலைவர்கள் அரசியல் கைதிகளையும் மறந்து விட்டார்கள்
அதற்காக உயிர் விட்ட உன்னையும் மறந்து விட்டார்கள்.
அவர்களது கவலை எல்லாம்
தங்கள் பதவி நீடிக்குமா அல்லது
மீண்டும் தேர்தல் வருமா என்பதே.
நீ எம்.பி சிறீதரன் வீட்டில் பிறந்திருந்தால்
நல்லூரில் தனி வீடு வாங்கி படித்திருக்கலாம்
நீ, மாவை சேனாதிராசாவின் மகனாக பிறந்திருந்தால்
இந்தியா சென்று படித்திருக்கலாம்
நீ சுமந்திரன் மகனாக பிறந்திருந்தால்
லண்டன் சென்று படித்திருக்கலாம்.
நீ ஏழை வீட்டில் பிறந்ததால்தானா
அரசியல் கைதிகளுக்காக உயிர் துறந்தாய்?
தமிழ்நாட்டில் எழுவர் விடுதலைக்காக உயிர் தறந்த செங்கொடிக்கு
நினைவு சின்னம் வைத்து வருடா வருடம் நினைவு கூர்கிறார்கள்
ஈழத்தில் அரசியல் கைதிகளுக்காக உயிர் துறந்த உனக்கு
ஒரு நினைவுச் சின்னம்கூட அமைக்க எமக்கு தோன்றவில்லை
மன்னித்துவிடு செந்தூரா!
சர்க்கார் பட கட்அவுட் கட்ட வேண்டும்
அப்பறம் எலெக்சன் வருது
தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்ட வேண்டும்
எங்களுக்கு நிறைய வேலை இருக்கு
அதில் உன்னை நினைக்க ஏது நேரம்?
குறிப்பு- அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 26.11.2015 யன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரன் நினைவாக எழுதும் குறிப்பு இது.

No comments:

Post a Comment