Friday, July 31, 2020

•இந்தியாவும் தமிழீழமும்!

•இந்தியாவும் தமிழீழமும்! இந்திரா காந்தி அம்மையார் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது உண்மை. ஆனால் அவர் ஒருபோதும் தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. இந்திரா காந்தி மரணத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த ராஜிவ் காந்தி அவர்களும் தமிழீழத்தை ஏற்க வில்லை. ஆதரிக்கவும் இல்லை. வாஜ்பேய், அத்வானி போன்ற பாஜக தலைவர்கள் கலைஞர் கருணாநிதி ஏற்பாடு செய்த மதுரை டெசோ மாநாட்டில் பங்குபற்றி தமிழீழத்தை ஆதரித்தார்கள். ஆனால் பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்து வாஜ்பேய் பிரதமரானபோது அவரும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி பாஜக ஆட்சிக்கு வந்தாலும் சரி இந்திய மத்திய அரசின் கொள்கை என்பது தமிழீழத்திற்கு எதிராகவே இருக்கிறது. அதேபோல் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் கட்சிகளில் கம்யுனிஸ்ட் கட்சியை தவிர மற்ற கட்சிகள் பெரும்பாலும் அனைத்தும் தமிழீழத்தை ஆதரிக்கின்றன. ஆனால் மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதுடன் நிறுத்திவிடுவார்கள். கேட்டால் இதற்குமேல் தமக்கு அதிகாரம் இல்லை என்பார்கள். அதுவும் கலைஞர் கருணாநிதி அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது தமிழீழத்தை வலியுறுத்தி டெசோ மாநாடு நடத்துவார். ஆனால் தமிழக முதல்வராக ஆட்சிபீடம் ஏறியதும் ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையே தமது கொள்கை என்று கூறி பல்டி அடித்து தனது பதவியை காப்பாற்றிக் கொள்வார். இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திற்கு இருக்கும் அதே அதிகாரம்தான் மேற்குவங்க மாநிலத்திற்கு உண்டு. ஆனால் பங்காபளாதேஸ் பிரிவினையின்போது மேற்கு வங்க முதல்வராக இருந்தவர் “இந்தியா படையை அனுப்பாவிடில் நான் எனது பொலிசை அனுப்புவேன்” என்று பகிரங்கமாக கூறினார். அப்போது மேற்கு வங்க முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனாலும் அவர் தனது கட்சிப் பிரதமர் இந்திராகாந்தியை எதிர்த்து துணிவாக தனது இன மக்களுக்காக குரல் கொடுத்தார். ஆனால் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று தமிழர் மரணங்களை கூறினார். அதுமட்டுமல்ல காங்கிரசுடன் சேர்ந்து இனப்படுகொலையில் பங்கெடுத்துள்ளார் என்று இப்போது சம்பந்தர் ஐயா கூற்றில் இருந்து தெரிகிறது. சரி. இப்போது இதையெல்லாம் ஏன் கூற வேண்டும் என்று இதை படிக்கும்போது கேள்வி எழலாம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முரண்பாடு அதிகரித்துவிட்டது என்றும் எனவே இந்தியா இனி தமிழீழத்தை அதரிக்கும் என சிலர் இப்பொது கூற ஆரம்பித்துள்ளார்கள். இது உண்மையா என்பதுபற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம். No photo description available.

No comments:

Post a Comment