Thursday, April 29, 2021

1991ம் ஆண்டு சட்ட அமைச்சராக

1991ம் ஆண்டு சட்ட அமைச்சராக பதவியேற்ற கே.ஏ.கிருஸ்ணசுவாமி அவர்கள் மதுரை சிறைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது அவர் சிறைக் கைதிகளை பார்வையிட்டுக்கொண்டு வரும்போது என்னை ஒரு ஈழப் போராளி என்று தெரிந்ததும் “ இனி உங்களுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடையாது. நெடுமாறனிடமும் கூறுங்கள்” என்றார். அதாவது ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் தமிழக மக்களின் ஆதரவு ஈழத் தமிழருக்கு இல்லை என்பதே அவர் கருத்தாக இருந்தது. அவர் கூறுவது தவறு என்று எனக்கு நன்கு தெரியும். ஆனால் அப்போதைய நிலையில் அவரை எதிர்த்து என்னால் கருத்து தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அவரது தலைவியான ஜெயா அம்மையாரே ஈழத் தமிழருக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு காலம் மாறியது. இன்று கிருஸ்ணசுவாமி உயிருடன் இல்லை. ஆனால் தமிழக கட்சிகள் யாவும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக தேர்தல் வாக்குறுதினள் அளித்துள்ளமையை என்னால் காண முடிகிறது. அதுவும் நேற்று கட்சி தொடங்கிய கமலஹாசனே “விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். ஈழ தேசம் அமைய வேண்டும்” என கூற வேண்டிய அளவிற்கு நிலமை உள்ளது. 2009ல் அமைச்சராக இருந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உதவிய ப.சிதம்பரம்கூட “ஜ.நாவில் மோடி தமிழருக்கு துரோகம் இழைத்து விட்டார்” என்று நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? சீமான்தான் இந்த மாற்றத்தை நிகழ்த்தினார் என்று நான் கூற வரவில்லை. மாறாக ஈழத் தமிழருக்கு ஆதரவான தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தியதில் சீமானுக்கும் அவரது நாம் தமிழர் தம்பிகளுக்கும் பங்கு உண்டு அல்லவா. அதை மறுக்க முடியுமா?

No comments:

Post a Comment