Thursday, April 29, 2021

யார் இந்த தோழர் தமிழரசன்?

•யார் இந்த தோழர் தமிழரசன்? 14.04.1945 யன்று பிறந்த தோழர் தமிழரசன் 01.09.1987 யன்று தனது 42வது வயதில் தமிழக உளவுப்படையினரால் கொல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்திருந்தால் 14.04.2021 யன்று தனது 76 பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். பொறியியல் படிப்பை படித்த தமிழரசன் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ மக்களுக்கான போராட்ட வாழ்வை விரும்பி ஏற்றார். அதனாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டார். தன் உயிர் பிரியும் அந்த இறுதிக் கணத்தில்கூட அவர் மக்களை நேசித்தார். அதனாலேயே அவர் தன் கையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தாமல் மௌனித்தார். அவர் விரும்பியிருந்தால் கையில் இருந்த கிரினைட் குண்டை வீசி தப்பிச் சென்றிருக்க முடியும். அவர் நினைத்திருந்தால் கையில் இருந்த சப் மிசின்கன் மூலம் பலரை சுட்டுக் கொன்றிருக்க முடியும். தன் இறுதிக்கணம்வரை மக்களை நேசித்த அத் தமிழரசனை, சதி செய்து கொன்றவர்கள் அவரை “பயங்கரவாதி” என்றார்கள். தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையை நசுக்கிவிட முடியும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் 30 ஆண்டுக்குள் தமிழக மக்களே தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையையும் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள். இன்று இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு தமிழக இளைஞனும் தன்னை தோழர் தமிழரசனாகவே நினைத்துக்கொள்கிறான். இன்று யாரும் தோழர் தமிழரசனை மறுத்து விட்டு தமிழ்த் தேசியம் பேசிவிட முடியாது. இதுதான் தோழர் தமிழரசனுக்கு கிடைத்த வெற்றியாகும். இன்று சிலர் தேர்தல் பாதை மூலம் தமிழ்த் தேசிய விடுதலை அடைய முடியும் என நம்புகிறார்கள். வெகுவிரைவில் இவர்களும் தோழர் தமிழரசன் முன்வைத்த ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதை மட்டுமே தமிழ்த்தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment