Thursday, April 29, 2021

ஏப்ரல் -1

• ஏப்ரல் -1 இது முட்டாள் தின செய்தி – ஆனால் முட்டாள் தனமான செய்தி அல்ல. ஏப்பிரல் -1 யன்று ஒரு பக்தன் பாப்பரசரிடம் “இயேசு மீண்டும் வந்து விட்டார் “ என்று கூறினான். அதற்கு பாப்பரசர் சிரித்து கொண்டே “ இன்று ஏப்ரல் -1 . என்னை முட்டாள் ஆக்க முடியாது” என்றாராம். ஆம். பாப்பரசருக்கு இயேசு மீண்டும் வரமாட்டார் என்பது நன்கு தெரியும். எனவே தான் அவர் முட்டாள் தினத்திற்காகக் கூட அதை நம்ப தயாராக இல்லை. எனினும் அவர் ஒவ்வொரு நாள் பூசையின் போதும் “இயேசு சீக்கிரம் வருகிறார்” என பக்தர்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறார். “இயேசு இறந்தாராம். அவர் மீண்டும் 3 நாளில் உயிர்த்தாராம். பின் மீண்டும் அவர் சீக்கிரம் வருவாராம்” என்று பாப்பரசர்கள் சொல்கிறார்கள். ஆனால் இரண்டாயிரம் வருடம் ஆகியும் இன்னும் அவர் வரவில்லை. ஒருவேளை சீக்கிரம் என்றால் அவர்கள் அகராதியில் இருபதினாயிரம் வருடமாக இருக்குமோ? இவர்கள் கூறும் இயேசு உண்மையா? அவர் திரும்பி வருவார் என்பது உண்மையா? என்பது ஒருபுறம் இருக்க அப்படி அவர் பிறந்து வந்தால் தயவு செய்து ஈழத்தமிழனாக பிறக்க வேண்டாம். அப்படி பிறந்தாலும் தப்பி தவறியும் தமிழ்நாட்டிற்கு அகதியாக வரவேண்டாம் . ஏனெனில் அவ்வாறு வந்தால் என்ன நடக்கும் என்பதை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதி ஒருவர் எழுதிய கவிதை வரிகளை படியுங்கள். தெரிந்து கொள்ளலாம். ஓ இயேசுவே! நீ மீண்டும் பிறந்து வருவதானால் ஈழத்தமிழனாக மட்டும் பிறந்துவிடாதே! அப்படி பிறந்தாலும் அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்துவிடாதே ஏனெனில் இம்முறை சிலுவையை விடக் கொடிய சிறப்பு முகாமில் அடைக்கப்படுவாய்! நண்பர்களே! சிறப்பு முகாம் கொடுமையை விளக்க இதைவிட சிறப்பான என்ன வரி வேண்டும்? எனவே இதனை உணர்ந்து இந்த கொடிய சிறப்பு முகாமை மூடுவதற்கு குரல் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment