Wednesday, June 22, 2016

•கலைஞர் இத்தனை நாளும் கோமாவில் இருந்தாரா?

•கலைஞர் இத்தனை நாளும் கோமாவில் இருந்தாரா?
திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலை செய்யுங்கள் அல்லது சாக விடுங்கள் என்று அந்த அகதிகள் கோருகின்றனர். ஆனால் அதிகாரிகளோ அவர்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் சித்திரவதை செய்கின்றனர்.
தனது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக 1990ம் ஆண்டு இந்த சிறப்புமுகாமை திறந்து அகதிகளை அடைத்தவர் கலைஞர் கருணாநிதி.
அதன் பின்பு இரண்டு முறை அவர் ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆனால் ஒருபோதும் தான் உருவாக்கிய சிறப்புமுகாமை மூட அவர் வழி செய்யவில்லை.
இப்போதுகூட அவரால் சிறப்புமகாமில் உள்ளவர்களை விடுதலை செய்யுங்கள் என்று ஓர் அறிக்கை விடமுடியவில்லை.
ஆனால் இலங்கையில் தமிழ் பகுதியில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெறும்படி அவர் அறிக்கை விடுகிறார்.
தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் மட்டுமல்ல சாதாரண அகதிமுகாம்களில்கூட ஈழ தமிழ் அகதிகள் துன்புறுத்தப்படுகின்றனர்.
மதுரை அகதிமுகாமில் தாசில்தார் தொல்லை பொறுக்க முடியாமல் 7 பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி அகதிமுகாமில் உள்ள அகதி ஒருவர் பொலிசாரினால் அழைத்து செல்லப்பட்டு கால் முறித்து அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகூட வழங்கப்படவில்லை.
மண்டபத்தில் அகதிப் பெண் ஒருவர் 4 பொலிசாரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். அது குறித்து இதவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் கலைஞர் கண்முன்னே இத்தனை அவலம் ஈழ அகதிக்கு இழைக்கப்படுகிறது. இவை குறித்து எந்த அறிக்கையும் விடாத கலைஞர், ராணுவத்தை வாபஸ் பெறும்படி இலங்கை அரசை கோருவதை நம்ப முடியுமா?
தனது நாட்டில் தனது அட்சியில் ஈழ அகதிகள் நலனைக் கருத்தில் கொள்ளாதவர், ஈழத்தில் ராணுவத்தை வாபஸ் பெறும்படி கோருவதை இலங்கை அரசு மதிக்குமா?
தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் ஜோக்கர்கள் (கோமாளிகள்) என்று இலங்கை ராணுவ தளபதி கூறியது சரிதான் என்றுதானே அவர்கள் கருதுவார்கள்.
முள்ளிவாயக்கால் அழிவிற்கு துணை போனவர், மகள் கனிமொழியை அனுப்பி மகிந்த ராஜபக்சவுடன் விருந்து உண்டு பரிசில் பெற வைத்தவர், பிரபாகரனின் வயதான தாயாரை இரக்கமின்றி திருப்பி அனுப்பியவர், இப்போது ராணுவத்தை வாபஸ் பெறுமாறு கோருவதை நம்பமுடியுமா?
ஆட்சியில் இருக்கும்போது தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வது, எதிர்க்கட்சியில் இருக்கும்போது தமிழ் மக்களுக்காக அறிக்கை விடுவது என்ற கலைஞரின் நடிப்பை நம்பி ஏமாற தமிழ் மக்கள் இனி தயாரில்லை.
காங்கிரஸ் சோனியாவுடன் கூட்டு சேர்ந்து பதவியை பெற துடிக்கும் கலைஞரின் துரோகத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

No comments:

Post a Comment