Thursday, August 18, 2016

சிபி மாறன் அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இங்கிலாந்தில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் சிபி மாறன் அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
தோழர் பாலன் எழுதிய "இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” எனும் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இந்த புத்தகத்தை எழுதியதற்காகவும், நான் படிக்க விருப்பப்பட்ட உடனே எனக்கு புத்தகத்தை அளித்து உதவியதற்காகவும் தோழர் பாலனுக்கு முதலில் என் மனம் நிறைந்த நன்றிகள்.
இந்த புத்தகம் சிறிய பதிப்பாக இருந்தாலும் இந்தியாவின் ஈழம் மற்றும் பிராந்திய அரசியலில் அதன் உண்மை முகத்தை இன்னும் புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது.
இந்தியா தனது பிராந்திய அரசியலுக்காகவும், தெற்காசிய வல்லரசு எனும் கனவையும் அடைய இலங்கையில் இருந்த இன முரன்பாடுகளை எப்படி ஊக்குவித்து தனக்கு சாதகமாக பயன்படுத்தியதை என்பதை நன்கு எடுத்துரைக்கிறது.
இந்த புத்தகம் இலங்கை மக்களிடையே “இந்தியா இலங்கைத் தமிழ் மக்கள் நலனைக் காக்கும்” என்று தவறான தகவலை பறப்பிக் கொண்டிருக்கும் இந்தியாவின் அடிமைகளுக்கு தக்க பதிலடியாக இருக்கும்.
நாம் இந்தியாவை ஆக்கிரமித்துக்; கொண்டிருக்கிற மேற்கத்திய ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாம்.
ஆனால் இந்தியாவும்கூட அதே பாதையைத்தான் பின்பற்றி தெற்காசிய நாடுகளை சுரண்டிக்கொண்டு வருகிறது என்பதை இன்னும் முழுமையாக உணரவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்;றால் தன் மீது தவறை வைத்துக்கொண்டும், அதை புரிந்து கொள்ளாதவரைக்கும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கமுடியாது.
இந்த புத்தகம் சில முக்கிய செய்திகளைச் சுட்டிக் காட்டுகிறது. தமிழ் தேசிய அதரவாளராகவும், அதற்காக போராடி தன் உயிரை விட்டவருமான தோழர் தமிழரசன் இந்தியாவின் உண்மை முகத்தை பற்றி 1983களில் ஈழப் போராளிகளுக்கு ஆயுத பயிற்சி என்று ஒரு நாடகத்தை நடத்திய போதே தெளிவாக எடுத்துரைத்தார்.
அவர் "இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை அங்கீகரிக்காது. மாறாக இலங்கை மீது அது ஆக்கிரமிப்பு செய்யவே விரும்புகிறது” என்பதை தெளிவாக எடுத்துரைத்தமை இப் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய அமைதிப்படை என்ற பெயரில் 1980களில் செய்ததும், இறுதி போரில் இன அழிப்பை முன் நின்று நடத்தியதும், போருக்கு பின் இலங்கை மீதான பொருளாதார ஆதிக்கமும் இந்தியாவின் எண்ணத்தை நன்கு பிரதிபலிக்கிறது.
இன்னும், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால்தான் இந்திய அரசு தொடர்ந்து தமிழினத்தை ஒரு விரோதியாக பார்க்க ஆரம்பித்தது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது தவறு, ராஜீவ்காந்தி கொலை செய்யப்படாமல் இருந்திருந்தாலும் வேறு ஒரு காரணத்தை கொண்டு இனப்படுகொலையை இந்தியா செய்திருக்கும் என்பதை இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு புரியவைக்கும்.
இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதுதான் ஈழத்தமிழர்களுக்கு முழு விடுதலையை நோக்கி பயணிக்கும் பாதையாகும். அதேபோல் இந்திய ஆக்கிரமிப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த இலங்கைக்கும் ஆபத்து என்பதை இலங்கை மக்கள் உணர்வதின் முக்கியத்தை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது.
அதே போல் "சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது” “இந்தியா ஈழத்திற்கு உதவும்” என்னும் பொய் பிரச்சாரத்தை இலங்கையிலும் இந்தியாவிலும் மேற்கொண்டு வருவதே இந்தியாவின் ஆதிக்கத்தை, ஆக்கிரமிப்பை மறைக்கத்தான் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இன்னும் தமிழர்களை தவறாக வழி நடத்துபவர்கள் தமிழ் இனத்திற்குள்ளேயே இருக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.
அவர்களை மக்கள் கண்டறிந்து புறக்கணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. மக்கள் முதலில் தங்களை சுற்றி நடக்கிற உண்மை அரசியலை உணர வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த புத்தகத்தை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
மீண்டும் தோழர் பாலா அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு அவரின் இந்த எழுத்து பணி மேலும் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
- சிபி மாறன்

No comments:

Post a Comment