Friday, March 25, 2022

இரு தினங்களுக்கு முன்னர்

இரு தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 80 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கை இந்திய நாடுகளிலும் கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என சிலர் கோரி வருகின்றனர். 2020ல் இதே நாளில் இந்தியாவில் நிர்பாயா குற்றவாளிகள் நாலு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இந்த நிமிடம் வரை பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்வது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. தப்பு என்பது தெரிந்தே செய்வது. தவறு என்பது தெரியாமல் செய்வது எனவேதான் தப்பு தண்டிக்கப்படல் வேண்டும். தவறு மன்னிக்கப்படல் வேண்டும் என்கிறார்கள். தண்டனை என்பது தப்பு செய்தவர் திருந்துவதற்கேயொழிய, இன்னொருவர் தப்பு செய்யக்கூடாது என்பதற்காக ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது மரண தண்டனை என்பது இன்னொருவர் தப்பு செய்யக்கூடாது என்பதற்காக தப்புசெய்த ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனையாகும். அது மட்டுமல்ல, மரண தண்டனை மூலம் தப்பு குறைக்கலாமேயொழிய ஒருபோதும் தப்புகளை இல்லாமல் செய்ய முடியாது ஏனெனில் அதிக தண்டனை வழங்கும் நாடுகளில் நிகழும் குற்றங்களைவிட குறைந்த தண்டனை வழங்கும் நாடுகளில் நிகழும் குற்றங்கள் குறைவு. எனவே உணர்ச்சிகரமாக சிந்திக்காமல் உணர்வுபூர்வமாக சிந்தித்து தண்டனைகளை வழங்க வேண்டும். முக்கியமாக ஒருவனை வாழ வைக்க முடியாத சமூகத்திற்கு அவனை தண்டிப்பதற்கான உரிமை இல்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

No comments:

Post a Comment