Thursday, November 30, 2017

தமிழ்மகன் புருசோத்தமன் ( Tamilson purusothaman ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருக்கும் தமிழ்மகன் புருசோத்தமன் ( Tamilson purusothaman ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கரவெட்டியைப் பிறப்பிடமாக கொண்ட தமிழ்மகன் புருசோத்தமன் அவர்கள் தற்போது லண்டனில் மருத்துவராக கடமையாற்றி வருகிறார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தமிழ்மகன் புருசோத்தமன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் ஆசிரியர் - தோழர் பாலன் முதற்பதிப்பு 1 செப்டம்பர் 2017
இது ஒரு காலத்தின் தேவையான புத்தகம்.
தோழர் தமிழரசன் போன்றோரை இந்த உலகம் மறந்து விடாதிருக்க , புதிய தலைமுறைக்கு போராளிகள் வரலாற்றை எடுத்துச்சொல்ல அவர்களுடன் கூடவே இருந்தோர் கடமைப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு என்னும் பிரதேசம் இந்தியா என்ற தேசியத்தின் கீழ் அடிபட்டு இருப்பதும் , அதனால் தமிழர்கள் அடைந்து வரும் பாதிப்புகள் உச்சத்தை அடைந்த வேளையிலும் , தமிநாடு விடுதலைக்காக போராடிய போராளிகளை நினைவூட்டுவது சிறந்த விடயம்.
இந்த புத்தகம் தமிழரசனை மையமாக பேசினாலும் , மார்க்சிசம், லெனினிசம் , மாஓ , ஈழ விடுதலை போராட்டம் , இந்தியவல்லாதிக்கம் என கடந்த கால , நிகழ் கால அரசியல் நிலைமைகளையும் விளக்குகின்றது.
சாதி என்பது பொருளாதாரம் சார்ந்த கட்டமைப்பு , சாதியம் என்பதில் பொருளாதார வர்க்க வேறுபாடே பிரதானமாக வருகின்றது. கம்யூனிசம் சாதியை எதிர்க்க வேண்டிய தாற்பரியத்தை அழகாக கூறியுள்ளார்.
போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் தந்திரத்தை பல உவமான உவமேயங்கள் கொண்டு தனக்கே உரிய பாணியில் மிக சுவாரசியமாக எழுதியுள்ளார் தோழர் பாலன்.
தோழர் பலனுக்கும் எனக்கும் பொதுவாகவே நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. அதே போல் இங்கும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு.
சில கருத்துக்களை எதிர்த்து வாதிட முடியாத வகையில் பல கோணங்களிலும் சிந்தித்து வரைவது இவரின் கைவந்த கலை.
வன்முறையே சிறந்த ஆயுதம் எனறு ஆணித்தரமாக நிறுவி உள்ள தோழர் , தனித்த தந்திரம் இல்லாத வன்முறை வேலைக்கு ஆகாது என்பதை குறிப்பிடவில்லை.
வன்முறையின் பால் சென்ற புலிகளை ஆதரிப்பதாகா நேரடியாக கூற ரொம்பவே தயங்குகின்றார்
புலிகள் சாதியத்தை ஒழிக்க ஒன்றுமே செய்யவில்லை என்பது அபத்தம் , தங்களால் முடிந்ததை செய்தனர் என்பதே உண்மை.
தான் இலங்கையில் உள்ள தோழர்களுக்கு எழுதிய கடிதத்தையும் , அது எவ்வாறு புலிகளை சென்றடைந்தது என்பதையும் , கடிதத்தில் பேர் வந்ததற்காகவே செய்த கொலைகள் என பல ஆவலாக எதிர்பார்த்த விடயங்கள் இல்லை.
இதை வேண்டும் என்றே தவிர்த்தாரா , அல்லது தேவை இல்லை என்று தவிர்த்தாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.
இந்திய அரசாங்கத்தின் செயல்களை ரொம்பவே அவதானித்து , தரவுகளுடன் சேகரித்து வருகின்றார் என்பது வெளிச்சம். சில தரவுகள் வியப்பை தருவதாக உள்ளது.
நானும் அவர் ஊரை சேந்தவன் என்பதால் சில சம்பவங்கள் வாசிக்க சுவாரஸ்யமாகவே உள்ளன.
யாழ்பாணத்து சாதியை நன்கே வரிந்து கட்டியுள்ளார். ஆனால் நிகழ்கால நிலைமையை இவர் சரியாக விளங்கி கொள்ளவாய்ப்பில்லை. பழைய நிலைமையின் அடிப்படையில் வரிந்து கட்டியுள்ளார்.
சாதியில் தான் சர்ச்சை , சர்ச்சையில் தான் பிரபலம் , பிரபலத்தில் தான் விற்பனை என்ற சூத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment