Friday, May 31, 2019

•2009 இனப்படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியுமா?

•2009 இனப்படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியுமா?
தமிழ் இனம் மீண்டும் எழுந்திட முடியுமா?
2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தமிழ் இனம் மறந்துவிட வேண்டும் என இலங்கை இந்திய அரசுகள் விரும்புகின்றன.
“வடக்கின் வசந்தம்” மூலம் கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என மகிந்த ராஜபச்ச நினைத்தார்.
50 ஆயிரம் வீடு கட்டித் தருவதாக கூறினால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என இந்திய அரசு நினைத்தது.
சுமந்திரனை விலைக்கு வாங்குவதன் மூலம் இனப் படுகொலையை வெறும் போர்க்குற்றமாக தமிழ் மக்கள் மனங்களில் மாற்றிவிட முடியும் என இன்றைய நல்லாட்சி அரசு நினைத்தது.
ஆனால் ஆண்டு செல்ல செல்ல தமிழ்மக்கள் மறப்பதற்கு பதிலா இன்னும் அதிகம் அதிகமாக அதனை நினைவில் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மட்டுமே முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர்ந்தனர்.
ஆனால் இன்று தமிழக தமிழர்கள், மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் எல்லோரும் இதனை நினைவில் கொள்கின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந் நாட்களில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மற்ற இன மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள்.
புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் அடுத்த சந்ததி தமிழ் மொழியை பேசாவிட்டாலும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான நீதியைக் கோராமல் இருக்காது.
ஜ.நா வில் ஈழத் தமிழருக்கான நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால் உலக மக்கள் இந்த அடுத்த சந்ததியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது.
கடந்த வருடம் போன்று இம்முறையும் சகல தமிழ் தரப்பினரையும் ஒன்று திரட்டி அஞ்சலி நிகழ்வுகளை பல்கலைக்கழக மாணவர்கள் செய்து விடுவார்களோ என்று அஞ்சி அவர்களை கைது செய்துள்ளது இலங்கை அரசு.
தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றது மட்டுமன்றி அவர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதையும் அச்சுறுத்தி அடக்க முனைகிறது இலங்கை அரசு.
ஆனால் அடக்குமுறை இருந்தால் அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும் அல்லவா. ஆம், இலங்கையில் அடக்கலாம். இங்கிலாந்தில் அடக்க முடியுமா?
இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் இம்முறை இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை உரத்து சொல்வார்கள்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்தாலும் தமது உணர்வுகளை அடக்கிவிட முடியாது என்பதே அது.
ஆனால் இங்கிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புகள் இதைப் புரிந்து கொண்டு செயற்படப்போகிறார்களா அல்லது வழக்கம்போல் பிரிந்து நின்று இலங்கை அரசுக்கு உதவிடப் போகிறார்களா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமக்குள் என்ன வேறுபாடு இருந்தாலும் இந்த முறை இந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ஒருமித்து ஒற்றுமையாக செய்ய வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களின் விருப்பமாகும்.
அவ்வாறு ஒற்றுமையாக அனைவரும் ஒருமித்து செயற்பட்டால் “தமிழ் மக்கள் மீண்டும் எழுந்து விட்டார்கள்” என்ற செய்தி உலகிற்கு தெரியப்படுத்தப்படும்..

No comments:

Post a Comment