Friday, May 31, 2019

•தனு வின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுமா?

•தனு வின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுமா?
1991ம் ஆண்டு எப்ரல் மாதம், மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை திடீரென 60 வயதான குருசாமி என்பவரை கொண்டு வந்து எனது அருகில் அடைத்தார்கள்
கொலைக் குற்றம் ஒன்றிற்காக 14 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்த குருசாமியின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டமையினால் தூக்கில் இடுவதற்காகவே அவரை என் அருகில் உள்ள செல்லில் அடைத்தார்கள்.
இறுதியாக அவரது குடும்பத்தவர்கள் வந்து பேசினார்கள். தனக்கு வயதாகிவிட்டது என்றும் தான் எல்லாம் அனுபவித்துவிட்டேன். எனவே சாவது பற்றி கவலைப்படவில்லை என சிரித்தக்கொண்டே பிள்ளைகளிடம் அவர் கூறினார்.
அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் அதிகாரிகள் வந்து குருசாமியை எழுப்பினார்கள். அவரை குளிக்கவாத்து சுடு சோறு சாப்பிட கொடுத்தார்கள். அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் பீடீ கேட்டு வாங்கி பற்றியதைக் கண்டேன்.
இறுதியாக அதிகாரிகள் “வா குருசாமி போகலாம்” என்று அழைத்தது கேட்டது. ஆனால் அதன் பின்னர் இரு காவலர்கள் அவரை தொர தொரவென்று இழுத்து செல்வதே எனக்கு தெரிந்தது.
முதல் நாள் சாவது பற்றி தனக்கு கவலை இல்லை என்று கூறியவர் அடுத்த நாள் தானாகவே நடந்து செல்வார் என நினைத்திருந்த எனக்கு அவர் இழுத்து செல்லப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
இதுபற்றி அவரை இழுத்துச் சென்ற காவலரிடம் அடுத்த நாள் கேட்டேன். அதற்கு அவர் “என்னதான் உறுதியாக இருந்தாலும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களின் கால்கள் சோர்ந்துவிடும். பாதி மயக்க நிலையிலேயே இழுத்து சென்று தூக்கில் இடுவது வழக்கம்” என்றார்.
1991ம் அதே ஆண்டு. ஆனால் மே மாதம் 21ம் திகதி. மதுரை சிறையில் நள்ளிரவு. திடீரென்று எனது செல் முன்பு காவல் பலப்படுத்தப்பட்டது. என்ன காரணம் என்று கேட்டபோது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சேதி சொல்லப்பட்டது.
பின்னர் ராஜீவ்காந்தி கொலை பற்றிய விபரங்கள் வெளிவந்தபோது தனு வின் உணர்வுகள் குறித்து சிந்தித்து பார்த்தேன்.
இன்னும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது. குண்டு வெடித்தால் தனது இலக்கு மட்டுமல்ல தானும் மரணமடையப்போவது அந்த பெண்ணிற்கு தெரியும்.
ஆம். தான் இறக்கப்போவது அந்த பெண் தனு விற்கு நன்கு தெரியும். அவரது அந்த இறுதி நிமிடங்களில் நிச்சயம் தன் தாய் தந்தையர் முகம் வந்திருக்கும் தன் கூடப்பிறந்த சகோதர்கள் நினைவுகள் வந்திருக்கும்.
ஆனால் அவர் முகத்தில் எந்த பட படப்பும் இல்லை. எந்த மரண பயமும் இல்லை. கொஞ்சம் காட்டியிருந்தால்கூட அவரது திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என்பதையும் அவர் அறிந்திருக்கவேண்டும்.
வயதான, எல்லாம் அனுபவித்த குருசாமிகூட மரண தருவாயில் கால்கள் சோர்ந்து பாதி மயக்க நிலைக்கு சென்றார். ஆனால் இந்த இளம் வயதில் எதையும் அனுபவிக்காத தனு உறுதியாக நின்றமைக்கு என்ன காரணம்?
தனு விரும்பியிருந்தால் பின்வாங்கியிருக்கலாம். மனம் மாறியிருக்கலாம். அதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது.
ஆனால் தனு தானாகவே கேட்டு இதனை மேற்கொண்டதாக கூறுகிறார்கள். அப்படியென்றால் தனு வின் இந்த உணர்வுகளுக்கு என்ன காரணம்?
ராஜிவின் கொலை பற்றி பேசுபவர்கள் எத்தனை பேர் இந்த தணுவின் உணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர்?
அவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தால் அமைதிப்படை என்று வந்து இந்திய ராணவம் செய்த கொலைகள , பாலியல் வல்லுறவுகள், சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட விபரங்கள் தெரிந்திருக்கும்.
ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக தனு என்ற இளம் பெண் கொடுத்த தண்டனை இது என்று புரிந்திருக்கும்.
அதனால்தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் தளபதி தோழர் லெனின் “தனுவிற்கு வீர வணக்கம்” செலுத்தவதாகவும் ராஜீவ் நினைவு மண்டபம் அகற்றப்பட்டு அங்கு தனுவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

No comments:

Post a Comment