Sunday, May 12, 2019

•எது விதைக்கப்பட்டதோ அதுவே அறுவடை செய்யப்படுகிறது!

•எது விதைக்கப்பட்டதோ
அதுவே அறுவடை செய்யப்படுகிறது!

மத அடிப்படைவாதிகளை அனுமதித்ததன் விளைவை இலங்கை மக்கள் இப்போது அனுபவிக்கின்றனர். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமல்ல இந்து. கிருத்தவ மற்றும் பௌத்த மத அடிப்படைவாதிகளும் பயங்கரவாதிகளே. எனவே அனைத்து மத அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும். இதற்காக மக்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.

21.04.2019 யன்று இயேசு உதித்த ஈஸ்டர் நாளை கிருத்தவர்கள் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளை
01. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்
02. நீர்கொழும்பு கட்டுவித்த தேவாலயம்
03. மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்
04. கொழும்பு சங்கிரில்லா கொட்டேல்
05. கொழும்பு சினமன் கிரேன்ட் கொட்டேல்
06. கொழும்பு கிங்க்ஸ்பெரி கொட்டேல்
07. தெஹிவல மிருக காட்சிசாலைக்கு முன்பாக கொட்டேல்
08. தெமட்டகொட தொடர் மாடிக்குடியிருப்புக்கு அருகில்
ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. இதில் சுமார் 260 பேர் பலியாகி உள்ளனர். இந்த பயங்கரவாத செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயேசு உதித்த ஞாயிறு என்றார்கள் இந்த நாளில் குழந்தைகளைக்கூட குண்டு வைத்து கருக்கியுள்ளார்கள். அதுவும் மதத்தின் பேரால் இந்த கொடுமையைச் செய்திருக்கிறார்கள். இதனால்தானோ “மதம் ஒரு அபின்” என்றார் காரல் மார்க்சு என்று எண்ண வேண்டியுள்ளது. இப்போது என்முன் எழும் கேள்வி என்னவெனில் இவ்வாறு மதத்தின் பேரால் நடக்கும் கொலைகளை இன்னும் எத்தனை நாளைக்கு நாம் அனுமதிக்கப் போகிறோம்? ஏனெனில் இதுவரை நடந்த இரண்டு உலக மகாயுத்தங்களிலும் இறந்தவர்களைவிட மத மோதல்களால் இறந்த மக்களின் எண்ணிக்கையே அதிகம் என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாம் இன்னொரு உலக யுத்தம் எற்பட்டுவிடக்கூடாது என்றுதான் சிந்திக்கிறமே யொழிய அதைவிட பயங்கரமான இந்த மத மோதல்களை நிறுத்துவது குறித்து சிந்திப்பதில்லை.

இந்த குண்டு வெடிப்புகளின் வலி எந்தளவு கொடுமையானது என்று தமிழர்களாகிய எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் இதை நிறையவே அனுபவித்தவர்கள் நாங்கள். இந்த நிலை இனி இன்னொருவருக்கு வரவேண்டாம். வெறுமனே “ஆழ்ந்த இரங்கல்” என்று கூறிவிட்டு கடந்து செல்ல முடியவில்லை இன்னொரு முறை இலங்கையில் இப்படி நடந்து விடாமல் எப்படி தடுக்கப் போகிறோம்? நடந்து முடிந்தபின் ஊரடங்கு சட்டம் போடுவதாலோ அல்லது கடுமையான அவசரகாலச்சட்டம் அமுல் படுத்துவதாலோ இத்தகைய குண்டு வெடிப்பு சம்பவங்களை ஒருபோதும் தடுத்திட முடியாது. அதுவும் மதத்திற்காக குண்டு வைத்தால் சொர்க்கத்திற்கு போகலாம். அங்கு 72 அழகான கன்னிகையரை கடவுள் தருவார் என்ற முட்டாள்தனமான கருத்து இருக்கும்வரை இவ்வாறு குண்டு வைப்பவர்களும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். அதுமட்டுமல்ல உலகில் பௌத்த அடிப்படைவாதிகள் இருக்கும்வரை, இந்து அடிப்படைவாதிகள் இருக்கும்வரை, கிருத்தவ அடிப்படைவாதிகள் இருக்கும்வரை, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இருப்பார்கள். எனவே இவ்வாறு குண்டு வெடிப்புகள் நிகழ்வதை தடுக்க வேண்டுமாயின் அனைத்து மத அடிப்படைவாதிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் குண்டு வெடித்ததும் அரசு மத அடிப்படைவாதிகளை தடை செய்யவில்லை. மாறாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்களையே உடன் தடை செய்தது. அதன்பின் மக்கள் எதிர்ப்பு தோன்றியதும் தற்போது குண்டு வெடிப்பிற்கு காரணமானது என்று கூறப்படும் “தௌஹீத் ஜமாத்” என்னும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை தடை செய்துள்ளது. ஆனால் “பொதுபலசேனா” என்னும் பௌத்த மத அடிப்படைவாத இயக்கத்தையோ அல்லது “சிவசேனை” என்னும் இந்துமத அடிப்படைவாத இயக்கத்தையோ அரசு இதுவரை தடை செய்யவில்லை.

யப்பானில் ஒரு கிராமத்தில் 20 நிமிடம் மின்சாரம் தடைப்பட்டமைக்காக யப்பானிய மின்சக்தி அமைச்சர் 20 நிமிடம் குனிந்து நின்று மக்களிடம் மன்னிப்பு கோரினார் என்று கூறுகிறார்கள். இச் செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இலங்கையில் 8 இடத்தில் குண்டு வெடித்து 250க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஒரு அமைச்சர்கூட மக்களை பாதுகாக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் சில அமைச்சர்கள் தமக்கு இப்படி குண்டு வெடிக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரியும் என்று கொஞ்சம்கூட வெட்கம் இன்றி கூறுகிறார்கள் இவர்கள் இதை பொலிசாரிடம் கூறாவிட்டாலும் மக்களிடம் கூறியிருந்தால் மக்களும் தப்பியிருப்பார்களே.
இலங்கைச் சட்டத்தின்படி இப்படியான விடயங்களை தெரிந்து அதை பொலிசாருக்கு தெரிவிக்கவில்லை யென்றாலும் குற்றம்தான். அதற்கு குறைந்தது 7 வருடம் வரையில் தண்டனை வழங்க சட்டம் இடமளிக்கிறது. இந்த சட்டத்தின்படியே பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இலங்கையில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால் இந்த அமைச்சர்களும் இதே சட்டத்திற்கமைய தண்டிக்கப்பட வேண்டும்.

இதில் இன்னும் வேதனை என்னவென்றால் நாலு நாட்களுக்கு முன்னர் இந்திய உளவு நிறுவனம் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவித்ததாக கூறுகிறார்கள். ஆனால் ஜனாதிபதி தனக்கு தெரிவிக்கவில்லை என்று கூறி பிரதமர் ரணில் தப்பிக்கப் பார்க்கிறார். இதைவிட ஆச்சரியம் என்னவெனில் இந்தியாவில் குண்டு வெடிக்கிறது. அது இந்திய உளவுப்படைக்கு தெரிவதில்லை. ஆனால் இலங்கையில் குண்டு வெடிப்பது மட்டும் அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது. அதுமட்டுமல்ல, குண்டு வெடித்தவுடன் இதற்கு 150 டன் வெடி மருந்து பாவிக்கப்பட்டது என்றும் இந்திய பத்திரிகைகளுக்கு தெரிந்திருக்கிறது. அத்துடன் சம்பவம் நடைபெற்று 50 மணித்தியாலங்களின் பின்னரே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஆனால் சம்பவம் நடந்தவுடனே இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் செய்தது என்று இந்திய தரப்பு கூறத் தொடங்கிவிட்டது

இப்போது பிரச்சனை என்னவென்றால் இச் சம்பவங்கள் தொடர்பான உண்மை விபரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே ஜனாதிபதியை இந்திய உளவு நிறுவனம் கொலை செய்ய முயற்சி செய்த விடயம் அமுக்கப்பட்டு விட்டது. இப்போது இந்த சம்பவத்தை விசாரிக்க அமெரிக்க இந்திய மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இண்டர்போல் நிறுவனமும் வருகை தருகிறது. இப்போது எமது கேள்வி என்னவெனில், முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையை விசாரிக்க சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது என்றவர்கள், சர்வதேச நீதிபதியை நியமிக்க அரசியல்அமைப்பு சட்டத்தில் இடமில்லை என்றவர்கள் இப்போது எப்படி அதுவும் உளவு நிறுவனங்களை விசாரணைக்கு அனுமதிக்கின்றனர்? ஐஎஸ்ஐஎஸ் ஆபத்து எனக் காரணம் காட்டி இனி விமான நிலையங்கள் துறைமுகங்கள் எல்லாம் அமெரிக்க மற்றும் இந்திய உளவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் விடப் போகின்றார்கள். கடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதி எல்லாம் இனி இவ் உளவு நிறுவனங்களே கண்காணிக்கப் போகின்றன.

பொதுவாக நாடு இவ்வாறு விற்கப்படுகின்ற நிலைமை வரும்போது ஜேவிபி அமைப்பினர்தான்  மிகப்பெரிய எதிர்ப்பை காட்டுவார்கள். அவசரகாலச்சட்டத்திற்கு எதிராகவும் அவர்களே எதிர்ப்பு காட்டி வந்தனர். இனி அவர்களும் எதிர்ப்பு காட்ட முடியாத நிலையை உருவாகியுள்ளது. அவர்களது கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் இக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலை ஜே.விபிக்கு. என்ன சட்டத்தையும் அமுல்படுத்து எந்த நாட்டு உளவுப்படையையும் அனுமதி. ஆனால் எங்களை இதில் சம்பந்தப்படுத்திவிடாதே என்று புலம்ப வேண்டிய நிலைதான் ஜேவிபி வந்துவிட்டது.

ஒருபுறம் குண்டு வெடிப்பை காரணம்காட்டி முஸ்லிம் மக்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மறுபுறம் குண்டுவெடிப்பை காரணம் காட்டி இந்நிய அமெரிக்க உளவுப்படைகளுக்கு நாட்டை திறந்து விடுகிறார்கள். இவற்றுக்கு எதிராக போராடுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் பலமான எந்தவொரு அமைப்பும் தயாராக இல்லை. எனவே இந்த பாரிய பொறுப்பு தமிழ் மக்கள் மீதே வரலாறு சுமத்தியிருக்கிறது. இதேபோன்று இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்தபோதும் அதற்கெதிராக தமிழ் மக்களே போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அதன் பின்னரே  சிங்கள மக்கள் மத்தியில் ஜேவிபி அமைப்பினர் முன்னெடுத்தார்கள். அதேபோன்று இப்போதும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பொறுப்பை தமிழ் மக்கள் நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக புலம்பெயர் தமிழர்களே இந்த பணியை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். “மக்கள் மீது யுத்தம் திணிக்கப்பட்டால் மக்கள் அதை தமது விடுதலைக்கான புரட்சிகர யுத்தமாக மாற்றுவார்கள்” என தோழர் மாசேதுங் கூறினார். அதேபோல் இலங்கை அரசு இந்திய மற்றும் அமெரிக்கவுக்கு நாட்டை விற்று மக்களை அடிமைப்படுத்த குண்டு வெடிப்புகளை பயன்படுத்த முனைகிறது. எனவே அதற்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள், கடந்த வாரம்தான் மன்னார் எண்ணெய் கிணறுகள் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்த வாரம் குண்டு வெடித்துவிட்டது. கடந்தவாரம்தான் கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யுமாறு இந்தியா இலங்கையிடம் கேட்டது. இந்த வாரம் குண்டு வெடித்து விட்டது. சீனாவை கண்காணிக்க தனக்கு திருகோணமலை துறைமுகத்தை தரும்படி அமெரிக்க கேட்டது. இலங்கை தயங்கியது. இந்த வாரம் குண்டு வெடித்துவிட்டது. இனி எந்த எதிர்ப்பும் இன்றி இலங்கையில் இந்திய அமெரிக்க விருப்பங்கள் நிறைவேற்றப்படும். இப்போது இந்த பின்னணிகளை மறைத்துக்கொண்டு ஐஎஸஐஎஸ் அமைப்பு முஸ்லிம் மக்களுக்காகத்தான் குண்டு வைத்தது என்று  பிரச்சாரம் செய்கிறார்கள்.

மதம் மனிதனை மிருகமாக்கும் என்றார் தந்தை பெரியார். அது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது  நடைபெற்ற குண்டு வெடிப்புகள். குண்டு வைத்தவர் ஒருவர் பெண். இன்னொருவர் பட்டதாரி. இருவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் லண்டன் மற்றும் அவுஸ்ரேலியாவில் படித்தவர். இருந்தும் இவர்கள் குழந்தைகளைக்கூட இரக்கமின்றி கொன்றிருக்கிறார்கள். எனவே இவர்களை  “மிருகங்கள்” என்று அழைப்பது பொருத்தமானதே. இன்னொரு குண்டு வெடிக்கக்கூடாது என்றால் இந்த மிருகங்களை ஒழிக்க வேண்டும். அதாவது அனைத்து மத அடிப்படைவாதிகளையும் ஒழிக்க வேண்டும். ஆனால் இதை அரசுகள் ஒருபோதும் செய்ய முன்வராது. ஏனென்றால் இன்று மதம் என்பதும் ஒரு பிசினஸ் போல் ஆகிவிட்டது. அதனால்தான் காப்ரேட் கம்பனிகளால் மதம் அரவணைக்கப்பட்டு வருகிறது. மதங்களை எதிர்த்தே முதலாளித்தவம் தோன்றியது. ஆனால் இன்று முதலாளித்துவத்தின் இருப்பிற்கு மதங்கள் துணை புரிகின்றன. அதனால்தான் மதங்கள் அரசுகளால் பேணி பராமரிக்கப்படுகின்றன. இதனையே  “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்ப விடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்” என்று தோழர் லெனின் கூறினார்.

2009ல் முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது “ புலிகள் எல்லாம் தமிழர்கள். எனவே தமிழர் எல்லாம் புலிகள்தான்” என்றார் கோத்தபாயா ராஜபக்சா. அதுமட்டுமல்ல “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். அவரைச் சுட்டக் கொன்றதும் சரிதான்” என்றும் நியாயப்படுத்தினார். ஆனால் இப்போது “குண்டு வைத்த பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் ஆனால் முஸ்லிம்கள் எல்லாம் பயங்கரவாதிகள் இல்லை” என்று ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், எதிர்க்கட்சிதலைவர் மகிந்த மற்றும் தமிழர் தலைவரான சம்பந்தரும் கூறியுள்ளார்கள். ஆனாலும்கூட மறுபுறத்தில்  குண்டுவெடிப்பை அடுத்து முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிளவு அதிகரிக்கிறது.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல இந்திய அமெரிக்க அரசுகள்கூட இனங்களுக்கிடையே பிளவுகளை எற்படுத்த முனைகின்றன. ஏனெனில் தமக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு திரண்டுவிடக்கூடாது என அவை நினைக்கின்றன. சம்பூரில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுடன் வேடுவ இன மக்களும் ஜக்கியப்பட்டு போராடியதாலே இந்திய ஆக்கிரமிப்பை விரட்ட முடிந்தது. அதன் பின்னரே இந்திய உளவு நிறுவனம் இலங்கையில் மக்களிடையே மத ரீதியான பிளவுகளை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. அதுமட்டுமல்ல மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் பொதுபலசேனா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பிற்கும் தற்போது குண்டு வைத்ததாக கூறப்படும் இஸ்லாமிய இயக்கத்திற்கும் ஒரே கணக்கில் இருந்தே பணம் இரகசியமாக வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 150 வருடங்களுக்கு போதுமான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் வளத்தை கைப்பற்றும் சக்தியே எதிர்காலத்தில் உலகில் பலமிக்க சக்தியாக இருக்கப்போகிறது. எனவேதான் மன்னார் மக்களும் சம்பூர் மக்கள் போல் ஒன்றுபட்டு எதிர்த்துவிடக்கூடாது என்பதற்காக மன்னாரில் மத மோதல்கள் திட்டமிடப்படுகிறது என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக தெரிகிறது இனிவரும் காலங்களில் மக்கள் இன ரீதியாக மட்டுமன்றி மத ரீதியாகவும் பிளவுபடுத்தப்பட்டு மோதவிடப் போகிறார்கள்.

எனவே அனைத்து ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பில் இருந்து இலங்கை மக்கள் விடுதலை பெறுவதற்கு இனங்களுக்கிடையேயான ஜக்கியம் மிகவும் அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கடையேயான ஜக்கியம் இரு இன மக்களுக்கும் அவசியமாகும். இதை தமிழ் மக்கள் மட்டுமல்ல இஸ்லாமிய மக்களும் உணர வேண்டும். உணர்ந்து அதற்காக செயற்பட முன்வர வேண்டும்.

கொஞ்சம் யோசியுங்கள் இஸ்லாமியர்களே!
• இரண்டுஅரோபிய நாடுகள்
• 10 அரேபியரல்லாத இஸ்லாமியநாடுகள்
• கணக்கில் அடங்காத எண்ணெய்வளம்
• அதனால்பெருகும் பணம் மற்றும் ஆயுதங்கள்
• வரலாற்று நியாயங்கள்
• எல்லாம் வல்ல அல்லா
இவைஅனைத்தும் இருந்தும்
அளுத்கமவில் வீடுகள் எரிக்கப்பட்டதை தடுக்கமுடியவில்லை!
அம்பாறையில் நிலம் பறிபோவதை எதிர்க்க முடியவில்லை!
60 பள்ளிவாசல்களை பௌத்த அடிப்படைவாதிகள் எரித்து அழித்தபோது எதுவும் செய்ய முடியவில்லை.
“அல்லாவுஅக்பர்” கோசம் போடுவதாலோ, வெள்ளிகிழமைகளில் ;பிரார்த்திப்பதாலோ எதுவும் ஆகப்போவதில்லை.
எனவே இனியாவது தமிழ் மக்களுடன் ஜக்கியப்படுங்கள். அதன் மூலமே உங்களுக்கான பாதுகாப்பையும் உரிமையையும் பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் எத்தனையோ குண்டு வெடித்துள்ளது. ஆனாலும் அங்கு தமிழ் மற்றும் இஸ்லாமியரிடையே பிளவை உருவாக்க முடியவில்லை. மாமா மாப்பிளை உறவு முறை கொண்டாடி ஒற்றுமையாக இருக்கிறார்கள். எனவே தமிழக இஸ்லாமிய தலைவர்கள் ஈழத்து இஸ்லாமியர்களுக்கு வழி காட்ட வேண்டும். ஈழத்தில் தமிழ் முஸ்லிம் ஜக்கியம் எற்பட உதவிட வேண்டும். இனி தமிழ் மற்றும் முஸ்லிம் ஜக்கியம் சாத்தியமா? என்;று சிலர் கேட்கிறார்கள். முதலில் தமிழ் முஸ்லிம் ஜக்கியம் அவசியம் என்பதை உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தால் அதன் பின் ஜக்கியம் என்பது சாத்தியமே!

இந்த குண்டை வெடிப்பை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள விளைவுகள்
1. மீண்டும் ஒரு யுத்த காலத்தைப்போல நாடு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது.
2. வடக்குக் கிழக்கிலிருந்து படையினர் வெளியேற வேண்டும் என்ற நிலை தலைகீழாகி விட்டது. பாதுகாப்புக்குப் படையினரில் தங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
3.முஸ்லிம்கள் வரலாறு கண்டிராத நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
4. முஸ்லிம் சமூகத்தின் மீதான வெறுப்பை மறைத்து வைத்திருந்தவர்களை அடையாளம் காண வைத்துள்ளது.
5. இந்திய மற்றும் அமெரிக்க சக்திகள்; சுலபமாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
6. இலங்கையின் பொருளாதாரம் (சுற்றுலாத்துறை) பாரிய வீழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
7. மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
8. அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய பேச்சே இப்போதைக்கிருக்காது.
9. அரசியல் தீர்வுபற்றிய கதையாடல்கள் முடிவுக்கு வந்துவிட்டன.
10. தமிழ் மக்களுக்கு இனி எந்த தீர்வும் வழங்கப்படாது.

எனவே இந்த அபாய நிலைக்கு எதிராக மக்கள் போராடியே விடுதலை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே இவ் விடுதலையை பெற முடியும். அதுமட்டுமல்ல இந்திய மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் ஆதரவும் இதற்கு அவசியமாகும்.

No comments:

Post a Comment