Friday, May 31, 2019

• ஒற்றைப் பனை மரம்!

• ஒற்றைப் பனை மரம்!
ஒரு ஈழத் தமிழரால் ஈழப் போராட்டம் பற்றி எடுக்கப்பட்ட ஒரு சினிமா இது. சர்வதேச ரீதியில் பல விருதுகள் பெற்ற ஈழத்து சினிமா என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
மரங்களை சுற்றி வரும் காதல் பாட்டுகளோ அல்லது குத்து பாட்டுகளோ இல்லாத சினிமா இது.
வியாபார வெற்றிக்காக எந்த சமரசமும் செய்யப்படவில்லை. இருப்பினும் விருதுகளை மட்டுமன்றி வியாபார ரீதியாக வெற்றியையும் கொடுத்து வருகிறது.
நடிகர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். தொழில் நுட்பங்கள்கூட தென்னிந்திய சினிமாவுக்கு இணையாக இருக்கின்றது. எமக்கு தெரிந்த கதைதான். இருந்தாலும் இறுதிவரை சலிப்பின்றி நகர்கின்றது.
இயக்குநராக புதியவன் வெற்றி பெற்றிருப்பது மட்டுமன்றி இனி வரும் காலங்களில் சிறந்த படங்களை தருவார் என்ற நம்பிக்கைiயும் தருகிறார்.
கலகம் செய்ய துணிந்துவிட்டவனுக்கு உதவி புரிவதே ஒரு இலக்கியத்தின் பணியாக இருக்க வேண்டும் என மார்க்சிம் கார்க்கி கூறினார்.
அவர் எழதிய “தாய்” நாவல் ரஸ்சிய புரட்சிக்கு மட்டுமல்ல உலகில் ஏற்பட்ட பல போராட்டங்களுக்கு உதவி புரிந்தது. இன்றும்கூட உதவி வருகிறது.
ஆனால் “ஒற்றைப்பனை மரம்” இன்னொரு போராட்டம் முன்னெடுப்பதற்கு உதவி புரியவில்லை.
“ஒற்றைப் பனைமரம்” போராட்டத்தின் நியாயத்தை பேசியதைவிட போராட்டத்தில் விட்ட தவறுகளையே அதிகம் பேசுகிறது.
தவறுகளை திரும்பிப் பார்ப்பது என்பது முன்னோக்கி நடப்பதற்கு உதவுவதாகவே இருக்க வேண்டும்.
ஆனால் ஒற்றைப்பனை மரத்தில் தவறுகளை சுட்டிக்காட்டிய விதம் முன்னோக்கி செல்ல உதவுவதாக அமையவில்லை.
ஒவ்வொரு சொல்லுக்கு பின்னரும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கிறது என்று லெனின் கூறினார்.
ஒற்றைப்பனை மரத்தின் பின்னரும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கிறது.
இயக்குனர் புதியவன் எமது சமூகத்தின்
• சாதித்தீண்டாமையை எடுத்து காட்டுகிறார்
• பிரதேச வேற்றுமையை சுட்டிக் காட்டுகிறார்
• முஸ்லிம்களை வெளியேற்றியதை காட்டுகிறார்.
• மலையக தமிழரை ஒதுக்கியதைக் காட்டுகிறார்.
• பெண் அடிமைத்தனத்தை காட்டுகிறார்
இவ்வாறு அவர் சுட்டிக் காட்டியது அனைத்தும் உண்மைதான். எதையும் யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இவையனைத்தையும் தாண்டி இந்த சமூகம்தான் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தியது.
இந்த சமூகம்தான் இந்த போராட்டத்தில் இரண்டு லட்சம் உயிர்களை பலி கொடுத்துள்ளது.
இத்தனை இழப்பிற்கு பின்னரும் “எம்மை சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” என்று மீண்டும் எழுந்து நிற்பதும் இந்த சமூகம்தான்.
“தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் எம்மை ஒருபோதும் வாங்க முடியாது” என்று கேப்பாப்புலவில் ஒருமித்து போராடுவதும் இந்த சமூகம்தான்.
700 நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களுக்காக கொட்டும் மழையிலும் நடுங்கும் குளிரிலும் வீதியில் உட்கார்ந்து போராடுவதும் இந்த சமூகம்தான்.
சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தானே சிறுவன் பிரதிபன். அவனும் இந்த சமூகம்தான்.
உலகில் எல்லா சமூகத்திலும் இருப்பது போன்று எம் சமூகத்திலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதையும்தாண்டி பெருமைப்படக்கூடிய வீரம் செறிந்த வரலாறும் எமக்கு இருக்கிறது.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பாக வேண்டும் என சரியாகவே சொல்லியிருக்கிறார். பெண்கள் ஊர்வலம் போக வேண்டும் எனக் கூறுகிறார்.
700 நாட்களுக்கு மேலாக கேப்பாப்புலவு மக்களும் காணாமல் போனவர்களின் உறவுகளும் ஊர்வலம் போகின்றனர். இதுவரை எந்த தீர்வையும் அவர்களால் பெற முடியவில்லை.
அப்புறம் எந்த அடிப்படையில் அல்லது எந்த நம்பிக்கையில் பெண்களை ஊர்வலம் போகச் சொல்கிறார் இயக்குனர் பதியவன். அதுவும் துப்பாக்கி ஏந்தி போராடிய பெண்ணை கொடி பிடித்து ஊர்வலம் போகச் சொல்கிறார்.
ஒருபுறம் ஆயதப் போராட்டதினால் ஏற்பட்ட தவறுகளை காட்டுகிறார். மறுபுறத்தில் சங்கம் கட்டி ஊர்வலம் போகச் சொல்கிறார்.
இதைத்தான் மகிந்த ராஜபக்சவும் கூறினார். இதைத்தான் சம்பந்தர் சுமந்திரனும் கூறிவருகின்றனர். இதையே புதியவனும் கூறுவது ஆச்சரியம் தருகிறது.
அதுவும் புளட் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போராளியான புதியவனிடம் இருந்து அப் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் ஒரு சினிமா வருவது ஏமாற்றம் அளிக்கிறது.
இறுதியாக,
புதியவன் அவர்களே!
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை. எனவேதான் போராட்டம் இன்பமயமானது என்கிறார்கள்.

No comments:

Post a Comment