Wednesday, July 31, 2024

போராட்டம் மகத்தானது.

போராட்டம் மகத்தானது. அது சாதாரண மனிதனை போராளியாகவும் மாமனிதனாகவும் மாற்றுகிறது. சாதாரண இளைஞனான வசந்தனை மாமனிதன் மில்லராக மாற்றியதும் இந்த போராட்டமே. வசந்தன் எனது அயல் கிராமம் துன்னாலையை சேர்ந்தவர். அவரை எனக்கு படிக்கிற காலத்தில் இருந்து தெரியும். நாம் எல்லோரும் தாமரைக்குளத்தில் குளித்தது, அதன் அருகில் வயல்வெளியில் கிரிக்கட் விளையாடியது எல்லாம் இன்றும் நினைவில் இருக்கிறது. நாம் எமது இயக்க செலவுகளுக்காக பருத்தித்துறையில் இருந்த வங்கி ஒன்றில் பணம் கொள்ளையிட முடிவு செய்தோம். அந்த வங்கியின் பொறுப்பாளராக வசந்தனின் தந்தையார் இருந்தார். அவர் போராட்டத்திற்கு ஆதரவான உணர்வாளராக இருந்தார். எனவே அவரிடமே சென்று ஆலோசனை கேட்டோம். நாம் வெற்றிகரமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அவரே எமக்கு பெரிதும் உதவினார். வசந்தன் மற்றும் மதி இருவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர். ஆனால் மதியின் சகோதரர் மதியை திருப்பி அழைத்து வந்து தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் இயக்கத்தில் சேர்த்துவிட்டார். லாறியில் வெடிமருந்தை நிரப்பிக் கொண்டு சென்று வெடிக்க வைத்து எதிரி முகாமை நிர்மூலமாக்கும் தாக்குதல் முதன் முறையாக வசந்தன் மேற்கொண்டதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் வசந்தனின் நண்பன் மதியே இந்த வகையான தாக்குதலை கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு முதலில் மேற்கொண்டவர். ஆனால் அத் தாக்குதல் வெற்றிபெற வில்லை. வசந்தன் தன் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அது அவருடைய சொந்த ஊரான கரவெட்டியை மட்டும் அதிர வைக்கவில்லை. முழு இலங்கையையும் அதிர வைத்தது. போராட்டம் வசந்தனை மில்லராக மாற்றியது. இன்று மில்லர் பெயர் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் எதிரிகளுக்கு அதிர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment