Tuesday, October 30, 2018

கோழிகூட ஒரு முட்டையை இட்ட பின்பே கொக்கரிக்கும் -

கோழிகூட ஒரு முட்டையை இட்ட பின்பே கொக்கரிக்கும் -ஆனால்
எதையும் இடமாலே காலம்பூரா கொக்கரிக்கும் சம்பந்தர் அய்யா!
செய்தி- “அகிம்சை வழியில் போராடியிருந்தால் எப்பவோ சுயாட்சியை பெற்றிருக்கலாம்” - பாராளுமன்றத்தில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு சம்பந்தர் அய்யா உரை.
துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார் மாவோ சேதுங்
பாட்டாளி வர்க்கம் அதன் பக்கத்திற்கு மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்துவிட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்று லெனின் கூறினார்.
அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்று இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகதாசன் கூறினார்.
அகிம்சை போராட்டத்தை முன்னெடுத்த தந்தை செல்வா அதன்மூலம் தீர்வு பெறமுடியாத விரக்தியில் “ தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார்.
அகிம்சைப் போராட்டம் பயனற்ற நிலையில்தான் தமிழ் இனைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் நியாயமானதால்தான் தமிழ் மக்கள் அதனை பூரணமாக ஆதரித்தார்கள்.
உண்மை வரலாறு இப்படி இருக்க, இதனை நன்கு அறிந்த சம்பந்தர் அய்யா, காந்தி ஜெயந்தியில் இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமென்றே பொய் கூறியிருக்கிறார்.
இங்கு வேதனை என்னவென்றால், தமிழரசுக்கட்சி அகிம்சைப் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டவர்களில் “இனி போராட்டம் நடத்தமாட்டேன்” என எழுதிக் கொடுத்து சிறையில் இருந்து முதல் விடுதலையானவர் இந்த சம்பந்தர் அய்யா.
இப்படிப்பட்ட சம்பந்தர் அய்யா இன்று எந்த முகத்தோடு அகிம்சைப் போராட்டம் நடத்தியிருந்தால் சுயாட்சி கிடைத்திருக்கும் என்று கூறுகிறார்?
அதுவும் அரசியல் கைதிகள் ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருந்தும், பல்கலைக்கழக மாணவர்கள் 5 நாட்களாக நடந்தும் இலங்கை அரசு அதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் கூறுகிறார்.
ஒரு அரசியல்கைதியைக்கூட விடுவிக்க முடியாத சம்பந்தர் அய்யா அகிம்சை வழியில் போராடி சுயாட்சியை பெறலாம் என்பது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான்.
குறிப்பு – அது சரி, தமிழ்செல்வனுக்கு பின்னால் பைல்கட்டு தூக்கி கொண்டு திரிந்தபோது அகிம்சை வழியில் சயாட்சி பெறலாம் என்ற ஞானோதயம் ஏன் சம்பந்தர் அய்யாவுக்கு வரவில்லை?

No comments:

Post a Comment