Tuesday, October 30, 2018

•ராஜதந்திரம் என்பது கல்லு கிடைக்கும் வரை நாய்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது!

•ராஜதந்திரம் என்பது கல்லு கிடைக்கும் வரை
நாய்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது!
நாய்களை கல்லால்தான் விரட்டி யடிக்க முடியும். ஒருபோதும் பேச்சுவார்த்தை மூலம் விரட்டியடிக்க முடியாது.
அகிம்சைப் போராட்ட பாதையிலும் ராஜதந்திரம் உண்டு. ஆயுத போராட்ட பாதையிலும் ராஜதந்திரம் உண்டு. ஆனால் ராஜதந்திரம் ஒருபோதும் தனிப் பாதையாக இருக்க முடியாது.
இன்று சில தமிழ் தலைவர்கள் ராஜதந்திரம் மூலம் தமிழ் மக்கள் விடுதலையை அடைய முடியும் என்பது நாய்களை பேச்சுவார்த்தை மூலம் விரட்டியடிக்க முடியும் என்பதற்கு ஒப்பாகும்.
இன்று தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியானது தமிழ் மக்கள் தம் கையில் கல்லு கிடைக்கும்வரை நாய்களுடன் ராஜதந்திரம் செய்ய வேண்டியுள்ளது.
பேய்களுடன் கூட்டு சேர்ந்து பிசாசுகளை எப்படி விரட்டுவது என்ற ராஜதந்திரத்தை தமிழ் மக்கள் பிரயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் யார் பிரதமராக வேண்டும், யார் ஜனாதிபதியாக வேண்டும் என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
மாறாக இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஏன் மைத்திரி கூட இதனை தீர்மானிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மக்களால் விரட்டப்பட்ட மகிந்த கும்பல் மைத்திரி மூலம் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற முனைகிறது.
எனவே மக்கள் விருப்பதற்கு மாறான இந்த மகிந்த ஆட்சியை அகற்றும் பொறுப்பை மக்களிடமே வழங்க வேண்டும்.
பிரதமர் ரணில் நீதிமன்றத்திற்கு செல்லாமல் மக்கள் மன்றத்திற்கு செல்ல வேண்டும். மக்களை திரட்டி பாராளுமன்றத்தை முற்றுகை இட வேண்டும்.
ஏனெனில் இலங்கையில் யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர் தனக்கு வேண்டிய தீர்ப்பை நீதிமன்றத்தில் பெற முடியும். அவ்வாறு மகிந்த தன் ஆட்சிக் காலத்தில் பல தீர்ப்புகளை பெற்றுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மகிந்த பலமானவர். அவரை எதிர்ப்பது கடினம் என சிலர் கூற முனைகின்றனர்.
ஆனால் மகிந்தவின் கைகளில் கட்டப்பட்டிருக்கும் தாயத்துகளின் எண்ணிக்கை தெரிந்தவர்களுக்கு அவர் எவ்வளவு பயந்தவர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்ல இது 2009ம் ஆண்டு அல்ல. 2018ம் ஆண்டு என்பதை கவனத்தில் கொள்வோம். முன்பு மாதிரி இனி மகிந்த கும்பல் அட்டகாசம் செய்ய முடியாது.
மகிந்த கும்பலை வெறுக்கும் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பு தமிழ் மக்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.
எனவே தமிழ் தலைவர்களான சம்பந்தர் அய்யா சுமந்திரன் போன்றோர் ஜக்கியதேசிய கட்சியுடன் சேர்ந்து மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதில் ஜே.வி.பியையும் இணைத்துக் கொள்ள முயல வேண்டும்.
இத்தகைய ஒரு போராட்டம் மேற்கொள்ளப்படுமாயின் சர்வதேச ஆதரவுடன் நிச்சயம் வெற்றியை பெற முடியும்.
எல்லாவற்றையும்விட முக்கியமான விடயம் என்னவெனில், இந்திய அமெரிக்க ஆதரவு கிடைத்தாலும் சிங்கள மக்களின் ஆதரவு இன்றி எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment