Tuesday, October 30, 2018

•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!

•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!
1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது. இது மைலாய் படுகொலைகள் ( My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது.
1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது.
•64 பொது மக்கள் கொல்லப்பட்டனர்
•100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர்
•50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர்.
•சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன.
•40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன.
•150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன.
•வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது.
இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.
இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை.
வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை.
மன்னிப்பு கோர விட்டாலும் பரவாயில்லை. ஆனால் இறந்த தம் உறவுகளை வல்வெட்டித்துறை மக்கள் நினைவுகூர்வதைக்கூட யாழ் இந்திய தூதர் மிரட்டி தடுக்கிறார்.
என்னே கொடுமை இது? பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பது போல் நியாயம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை, நினைவு கூர்வதையாவது அனுமதிக்கும்படி கெஞ்ச வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.
வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை.
படுகொலை செய்த இந்திய ராணுவத்திற்கு யாழ் மண்ணில் நினைவு தூபி அமைத்து இந்திய தூதர் மரியாதை செலுத்துகிறார்.
ஆனால் படுகொலையான தம் உறவுகளுக்கு வல்வை மக்கள் தமது மண்ணில் அஞ்சலி செலுத்தவதை அவர் தடுக்கிறார்.
என்னே கொடுமை இது?
குறிப்பு- ராஜீவ் மரணத்தின் போது இறந்தவர்களுக்காக நியாயம் பேசுவோர் இந்த வல்வை மக்களுக்காக கொஞ்சம் நியாயம் பேசுவார்களா?

No comments:

Post a Comment