Thursday, February 28, 2019

மாலைதீவு ஆட்சி கவிழ்ப்பு

•மாலைதீவு ஆட்சி கவிழ்ப்பு
புளட் இயக்கம் மீது நிராஜ்டேவிட் அவதூறு!
1988ம் ஆண்டு மாலைதீவு எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புளட் இயக்கம் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டது உண்மையே.
ஆனால் இது இந்திய உளவுப்படை கேட்டுக்கொண்டதற்கு இணங்க புளட் இயக்க தலைவர் உமா மகேஸ்வரன் செய்த சதி என நிராஜ் டேவிட் எந்தவித ஆதாரமும் இன்றி கூற முனைகிறார்.
நிராஜ் டேவிட் புளட் இயக்கத்தில் மட்டுமல்ல அவர் எந்த இயக்கத்திலும் இருந்ததாக தெரியவில்லை. அதுமட்டுமல்ல அந்த காலத்தில் அவர் ஊடகத்திலும் பணி புரிந்து இது பற்றிய தகவல்களை திரட்டியவராகவும் தெரியவில்லை.
அப்படியிருக்க இப்போது எதற்காக, எப்படி இந்த தகவல்களை ஆதாரம் இன்றி கூறுகின்றார்? ஏன் புளட் போராளிகள் மீது அவதூறு பரப்புகின்றார்?
இதில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் இப்போதும் உயிருடன் இருக்கின்றார்கள். குறைந்தபட்சம் அவர்களில் ஒருவரையாவது தொடர்பு கொண்டு அறிய முற்பட்டிருக்கலாம்.
•புளட் போராளிகள் தூத்துக்குடியில் இருந்து சென்றதாக நிராஜ் டேவிட் கூறுகின்றார். ஆனால் புத்தளம் கற்பிட்டியில் இருந்து சென்றதாக புளட் அமைப்பினர் கூறுகின்றனர்.
•இராமேஸ்வரம் காம்பில் இருந்து ஆயுதங்கள் சென்றதாக கூறுகின்றார். இதுவும் தவறு என்று பளட் அமைப்பினர் கூறுகின்றனர்.
•புளட் தலைவர் உமாமகேஸ்வரன் இந்தியா சென்று றோ அதிகாரிகளை சந்தித்து இத் திட்டத்தை மேற்கொண்டதாக நிராஜ் கூறுகின்றார். ஆனால் உமா மகேஸ்வரன் இலங்கை வந்த பின்பு இறக்கும்வரை இந்தியா செல்லவில்லை என புளட் அமைப்பினர் கூறுகின்றனர்.
•மாலைதீவு ஜனாதிபதி பல நாடுகளை உதவி கேட்டதாக நிராஜ் கூறுகின்றார். ஆனால் மாலைதீவு ஜனாதிபதி இலங்கையிடம் மட்டுமே உதவி கேட்டிருக்கின்றார். இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் இலங்கை ராணுவத்தை அனுப்ப சம்மதித்திருந்தார்.
அப்படியென்றால் இந்தியா மட்டும் எப்படி உடனடியாக தனது ராணுவத்தை அனுப்ப முடிந்தது என்று இதைப் படிப்பவர்களுக்கு கேட்க தோன்றும்.
இந்திய உளவுப்படைகளுடன் உறவு வைத்திருந்த சில பளட் போராளிகள் மூலமே சகல திட்டங்களும் றோ வுக்கு கிடைத்தது. அதன்மூலமே இந்திய அரசு தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.
சரி. அப்படியென்றால் பளட் ஏன் இதில் ஈடுபட்டது என்று நீங்கள் கேட்க நினைக்கலாம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் எற்பட்ட பின்னர் தமிழகத்தை பின்தளமாக பாவிக்க முடியாத நிலை அனைத்து இயக்கங்களுக்கும் ஏற்பட்டது.
இந்தியாவை தவிர வேறு எங்கேயாவது பின்தளம் உருவாக்க முடியுமா என புளட் மட்டுமல்ல பல இயக்கங்கள் அப்போது சிந்தித்தன.
இந்நிலையில் மாலைதீவு எதிர்க்கட்சி தலைவர் இலங்கை வந்து புளட் உட்பட இன்னும் சில இயக்கங்களிடம் உதவி கேட்டார். தான் ஆட்சியை பிடிக்க உதவி செய்தால் அதன்பின் மாலைதீவை பின்தளமாக பயன்படுத்த அனுமதிப்பதாக உறுதியளித்தார்.
அதனால்தான் அப்போது இலங்கையில் மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்த புளட் இயக்கம் சம்மதித்து உதவி செய்ய முனைந்தது.
ஆனால் மாலைதீவை பின்தளமாக பயன்படுத்தும் எண்ணம் முதன் முதலில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கே இருந்தது. ஆனால் அவர் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யாமல் மாலைதீவில் ஒரு தீவை பணம் கொடுத்து வாங்க முடியுமா என முயற்சி செய்தார்.
ஆனால் புளட் இயக்கத்தினரால் தனது மாலைதீவு திட்டம் குழம்பி விட்டது என்று தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் நினைத்தார். அதனால் அவர் பின்னர் பிஜி தீவில் ஏதும் வாய்ப்பு இருக்கிறதா என முயற்சி செய்தார்.
உண்மைகள் இப்படியிருக்கும்போது; இப்போது எதற்காக நிராஜ் டேவிட் புளட் இயக்கம் மீது அவதூறு பரப்புகிறார்?
குறிப்பு- நிராஜ் டேவிட்டின் வீடியோ இணைப்பு கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment