Monday, March 19, 2018

அய்யா! பிளீஸ் செத்துவிடுங்கள்!

•அய்யா!
பிளீஸ் செத்துவிடுங்கள்!
இந்தியா தீர்வு பெற்று தரும் என்றீர்கள்.
ஆனால் உங்கள் வடமாகாண முதல்வரோ
இந்தியா பொருளாதார நலனில் மட்டுமே
அக்கறை காட்டுவதாக கூறியிருக்கிறார்.
மகிந்த ராஜபக்சவை “தேசிய தலைவர்” என்றீர்கள்.
அவரோ உங்கள் பதவியை பறிக்க வேண்டும் என்கிறார்.
மைத்திரி நல்லாட்சி புரிகிறார் என்றீர்கள்
ஆனால் அவரோ தமிழ் மக்களுக்கு
எதையும் வழங்க மறுக்கிறார்.
உங்களுக்கு பதவியும் பங்களாவும் மட்டுமன்றி
சொகுசு வாகனமும் பொலிஸ் பாதுகாப்பும்
கேட்டு வாங்கினீர்கள். ஆனால்
ஒரு வருடமாக போராடும் கேப்பாப்புலவு மக்களுக்கு
ஏன் நிலத்தை வாங்கி கொடுக்க முடியவில்லை?
அவர்களின் சொந்த நிலத்தைக்கூட
வாங்கிக்கொடுக்க முடியாத உங்களால்
தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்று
எப்படி எங்களால் நம்ப முடியும் அய்யா?
புலிகளை “பயங்கரவாதிகள்” என்றீர்கள்
ஆயுதப் போராட்டத்தை எற்கவில்லை என்றீர்கள்
ஒருவருடமாக அறவழியில் போராடும் கேப்பாப்பிலவு மக்களுக்கு
உங்களால் ஏன் நிலத்தை பெற்றுக்கொடுக்க முடியவில்லை?
காணாமல் போனவர்களின் உறவுகள்
ஒரு வருடமாக வீதியோரம் உட்கார்ந்திருக்கிறார்கள்
அவர்களுடைய பிரச்சனைக்கும் உங்களால்
தீர்வு காணமுடியாவிட்டாலும் பரவாயில்லை
ஒருமுறையாவது அவர்களை நேரில் சந்தித்து
இரண்டு ஆறுதல் வார்த்தையாவது கூறியிருக்கலாமே?
தேர்தல் என்றவுடன் வன்னிக்கு ஓடிச் சென்று
கூட்டம் போட்டு பேச முடிந்த உங்களால்
அப்போதுகூட அருகில் இருந்த இந்த உறவுகளை
ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்று
உங்களுக்கு ஏன் தோன்றவில்லை அய்யா?
ஒரு வருடமாக பொறுமையாக போராடிய மக்கள்
உங்கள் உருவப் பொம்மையை எரித்திருக்கிறார்கள்.
உங்களுக்கு மரண இறுதிக் கிரியைகள் செய்திருக்கிறார்கள்.
உங்களுக்கு வோட்டுபோட்ட மக்கள் அதுவும் வயதான பெண்கள்
உயிரோடு இருக்கும் உங்களுக்கு இதனைச் செய்திருக்கிறார்கள்.
இத்தனைக்கு பிறகும் உங்களுக்கு பதவி வேண்டுமா?
கொஞ்சமாவது வெட்கம் மானம் இருந்தால்
பதவியை தூக்கியெறியுங்கள் அய்யா.
பதவி இல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்றால்
பிளீஸ் செத்துவிடுங்கள் அய்யா!

No comments:

Post a Comment