Monday, March 19, 2018

•சம்பந்தர் அய்யாவின் இறுதிப் பேட்டி!

•சம்பந்தர் அய்யாவின் இறுதிப் பேட்டி!
சம்பந்தர் அய்யா மரணப் படுக்கையில் இருந்தார். எந்நேரமும் அவர் உயிர் பிரியலாம் என்பதால் சுமந்திரன் அருகில் இருந்தார்.
அப்போது ஒரு ஊடகவியலாளர் “ அய்யா இத்தனை காலமும் எப்படி உங்களால் பதவியில் இருக்க முடிந்தது. அதன் ரகசியம் என்ன?” என்று கேட்டார்.
எனது இறுதி நேரத்தில் வந்து கேட்கிறாய். இருந்தாலும் கூறுகிறேன் கேள் என்றார் சம்பந்தர் அய்யா.
எனக்கு 3 குரு இருந்தார்கள். அவர்கள் போதித்த பாடத்தை பின்பற்றியதாலே என்னால் தொடர்ந்து பதவியில் இருக்க முடிந்தது.
எனது முதல் குரு ஒரு நாய். ஒருமுறை ஆற்றில் தண்ணி குடிக்க சென்ற நாய் தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்து குரைத்தது. பின்னர் அது ஆற்றில் குதித்ததும் உருவம் மறைந்தது கண்டு ஆசைதீர தண்ணீர் பருகியது.
தேர்தல் பாதையில் குதித்த நாம் மனட்சாட்சிக்கு பயப்படக்கூடாது என்பதை அந்த நாயின் மூலம் நான் உணர்ந்துகொண்டேன்.
எனது இரண்டாவது குரு ஒரு திருடன். நான் பயணம் செய்யும்போது ஒரு திருடன் வீட்டில் சில நாட்கள் தங்க வேண்டியதாகிவிட்டது.
அவன் ஒவ்வொரு நாளும் திருடுவதற்காக செல்வான். ஆனால் வெறும் கையுடன் திரும்பி வருவான். இருந்தும் நம்பிக்கையுடன் அடுத்த நாள் செல்வான்.
அவனிடமிருந்தே மக்களை ஏமாற்றுவதில் இருக்க வேண்டிய நம்பிக்கையும் விடாமுயற்சியும் நான் கற்றுக்கொண்டேன்.
எனது மூன்றாவது குரு ஒரு சிறுவன். ஒருமுறை நான் வன்னிக் காட்டிற்கு சென்றபோது சிறுவன் ஒருவன் மெழுகுதிரியை கொளுத்தி வைத்திருந்தான்.
அவனிடம் என் அறிவு மேன்மையைக்காட்ட விரும்பி “நீ இந்த மெழுகுதிரியைக் கொளுத்தினாய். ஒளி வந்தது. இந்த ஒளி எங்கிருந்து வந்தது? என்று கேட்டேன்.
அதற்கு அந்த சிறுவன் சிரித்தவிட்டு மெழுகு திரியை அணைத்தான். “இப்போது அந்த ஒளி எங்கு சென்றுவிட்டதோ அங்கிருந்துதான் வந்தது” என்றான்.
எனக்கு அந்த சிறுவனின் பதில் என் கர்வத்திற்கு செருப்பால் அடித்துபோல் இருந்தது. பதவி வேண்டுமென்றால் அந்த சிறுவனுக்கு பைல் காவினாலும் தப்பில்லை என்று அன்று முடிவு செய்தேன்.
இந்த பதிலைக் கேட்ட ஊடகவியலாளர் “ அய்யா உங்கள் முதலாவது குரு அமிர்தலிங்கம். அவரிடமிருந்து மனசாட்சிக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற பாடத்தை கற்றுள்ளீர்கள்.
இரண்டாவது குரு ஆனந்த சங்கரி. பயன் இல்லை என்று தெரிந்தாலும் மக்களை ஏமாற்ற தொடர்ந்து அவர் கடிதம் எழுதுவதன்மூலம் அவரிடமிருந்து நம்பிக்கையும் விடாமுயற்சியும் பாடத்தை கற்றுள்ளீர்கள்.
மூன்றாவது குரு தமிழ்செல்வன். அவரிடம் உங்கள் புலமைத்துவம் எடுபடவில்லை. எனவே பதவிக்காக கௌரவம் பார்க்கக்கூடாது என்று அவருக்கு பைல் கட்டு காவியுள்ளீர்கள்.
ஊடகவியலாளர் சரியாக கூறியதால் சம்பந்தர் அய்யா புன்சிரிப்பை உதிhத்தார்.
ஆனால் அருகில் கேட்டுக்கொண்டிருந்த சுமந்திரன் சந்தோசத்தில் குதித்து குத்துக்கரணம் அடித்தார்.
தொடர்ந்து பதவியில் இருக்கும் ரகசியத்தை சம்பந்தர் அய்யா கூறிவிட்டார். எனவே இனி நானும் சாகும்வரை பதவியில் இருப்பேன் என்று சுமந்திரன் சந்தோசத்தில் கூறத் தொடங்கிவிட்டார்.
குறிப்பு- இது கதையல்ல பாடம்!

No comments:

Post a Comment