Wednesday, February 28, 2018

•“அவரும் நானும்“ - துர்க்கா ஸ்டாலின்

•“அவரும் நானும்“ - துர்க்கா ஸ்டாலின்
“அவரும் நாங்களும்” - சிறப்புமுகாம் அகதிகள்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்க்கா எழுதிய “அவரும் நானும்” நூல் வெளிவந்துள்ளது.
அதில் அவர் கூறுகிறார் “ஒரு முறை காவிரி பிரச்சனைக்காக ஸ்டாலின் உண்ணாவிரதத்திற்கு புறப்பட்டபோது 5 இட்லிகளை வைத்தேன். அவர் எனக்காக இரண்டு இட்லிகளை சாப்பிட்டுவிட்டு சென்றார்”.
அதாவது உண்ணாவிரத போராட்டத்திற்காக ஸ்டாலின் 3 இட்லிகளை மட்டுமே தியாகம் செய்திருப்பதை பெருமையுடன் எழுதியிருக்கிறார்.
ஸ்டாலின் இப்படி சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஏனெனில் அவர் அப்பன் கருணாநிதி ஈழத் தமிழருக்காக காலைச் சாப்பாட்டிற்கும் மதிய சாப்பாட்டிற்கும் இடையில் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ஏமாற்றியவர் அல்லவா.
எனவே அவர் உண்ணாவிரத போராட்டத்திற்காக 3 இட்லிகளை தியாகம் செய்திருப்பது அவருடைய மனைவிக்கு பெரிய சாதனையாகத்தான் இருக்கும்.
ஆனால் இந்த துர்க்கா அம்மையாருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் ஒரு விடயத்தை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
துர்க்கா அம்மையாரின் கணவரின் தகப்பனார் மதிப்புக்குரிய கருணாநிதி அவர்கள் தனது ஆட்சியைக் காப்பாற்ற அப்பாவி அகதிகளை பிடித்து அடைத்து வைக்கும் சிறப்புமுகாமை 1990ல் உருவாக்கினார்.
அகதிகளைப் பிடித்து அடைத்து வைத்தவர் அந்த அகதிகளுக்கு போதுமான உணவு கிடைப்பதற்கு வழி செய்யவில்லை.
வேலூர் சிறப்புமுகாமில் இரண்டு அகதி இளைஞர்களை பொலிஸ் கமிஷனர் தேவாரம் சுட்டுக்கொன்றபோது அவர்கள் பிரியாணி கேட்டு கலகம் செய்ததால் சுட்டதாக பொய் கூறினார்.
துறையூர் சிறப்புமுகாமில் தமக்கு தரும் 2 ரொட்டி போதவில்லை. ஒரு ரொட்டி அதிகமாக தரும்படி கோரி அகதிகள் 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.
இருப்பினும் தமிழக அரசு இரங்கவில்லை. இறுதியில் துறையூரில் அன்னதானம் வழங்கும் சாமியார் ஒருவர் மதியம் இலவசமாக அன்னதான உணவை வழங்கினார்.
இன்னொருமுறை சோப்பு வாங்க பணம் இல்லை என்று ஒரு அகதிப்பெண் முறையிட்டபோது அவரை தமது பாலியல் உறவுக்கு பயன்படுத்திவிட்டு சோப்பு வாங்கி கொடுத்தார் ஒரு பொலிஸ் அதிகாரி.
துறையூர் சிறப்புமுகாமில் பட்டினியால் ஒரு அகதி வாடியபோது எழுதிய கவிதை இது,
ஓ மகாத்மாவே!
பிரிட்டிஷ் சிறையில்
இந்திய சுதந்திரத்திற்காக
உண்ணாவிரதம் இருந்தீர்.
அகதிகள் நாங்கள்
சிறப்புமுகாமில் தினமும்
உண்ணாவிரதம் இருக்கிறோம்
கோரிக்கைகள் எதுவும் இன்றி!
ஓ இயேசுவே!
மீண்டும் பிறந்து வந்துவிடாதே
பிறந்தாலும் அகதியாக
தமிழ்நாட்டிற்கு வந்துவிடாதே
ஏனெனில் இம்முறை
சிலுவையைவிடக் கொடிய
சிறப்புமுகாமில் அடைக்கப்படுவாய்!
துர்க்கா அம்மையார் அவர்களே!
உங்கள் கணவரின் 3 இட்லி தியாகத்தை புத்தகமாக எழுதுவதற்கு முன்னர் உங்கள் குடும்பத்தவர்களால் அடைத்து வைக்கப்பட்ட ஈழ அகதிகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
இல்லையேல் அகதிகள் “அவரும் நாங்களும்” என்று புத்தகம் எழுத வேண்டி வரும்.

No comments:

Post a Comment