Saturday, May 26, 2018

இத்தனை அழிவுக்கு பின்னரும்

இத்தனை அழிவுக்கு பின்னரும்
இத்தனை அழிவுக்கும் காரணமான இந்திய அரசு
தமிழீழம் எடுக்க உதவும் என்று கூறும் காசிஆனந்தன்!
வைகோ தமிழன் இல்லை என்றால் தானும் தமிழன் இல்லை என்று காசி ஆனந்தன் கூறியுள்ளார்.
வைகோ தமிழன் என்று காசி அனந்தன் சேட்டிபிக்கேட் கொடுக்க வேண்டிய நிலை. இப்படியொரு நிலை தனக்கு வரும் என்று வைகோ கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்.
அதேவேளை தமிழீழத்தில் வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் சிலை வைக்கப்படும் என்றும் காசி ஆனந்தன் கூறியிருக்கிறார்.
தமிழீழத்திற்காக போராடிய முன்னாள் போராளி ஒருவர் முள்ளந்தண்டு நோய் காரணமாக சிகிச்சையின்றி நேற்றைய தினம் மன்னாரில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பல முன்னாள் போராளிகள் தொடர்ந்து மரணமுற்று வருகின்றனர்.
ஆனால் காசி அனந்தன் வைகோவை தமிழனா என்று சிலர் சந்தேகப்படுவது குறித்து விம்மி அழுகிறார்.
முன்னாள் போராளிகள் குறித்து அக்கறை கொள்ளாமல் வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தமிழீழத்தில் சிலை வைப்பது குறித்து அவர் அக்கறை கொள்கிறார்.
இந்த போராளிகள் போராடியபோது இவர் தனது இரண்டு மகள்களையும் டாக்டருக்கு படிப்பித்தார். அதைக்கூட குறையாக நாம் இங்கு குறிப்பிடவில்லை.
ஆனால் அந்த மகள்களை அவர் இந்த முன்னாள் போராளிகளுக்கு சிகிச்சை செய்ய அனுப்பியிருந்தால் நிச்சயம் பெருமைப்பட்டிருக்க முடியும். ஆனால் இவர் அவர்களை லண்டனில் பணிபுரிய அல்லவா அனுப்பியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி இந்தியாவை எதிர்ப்பவர்கள் ஏன் எம்.பி, எம்எல்ஏ எலெக்சனில் போட்டியிடுகின்றனர் என்று வேற கேட்டுள்ளார்.
ஆனால் இலங்கை அரசை எதிர்த்து தமிழீழம் கேட்ட இவர் மட்டக்ளப்பில் தமிழரசுக்கட்சி சார்பில் எலெக்சன் கேட்டதை மறந்துவிட்டார் போலும்.
சரி அதைகூட விட்டுவிடலாம். ஆனால் தமிழீழம் எடுக்க இந்தியா உதவும் என்று கூறியிருப்பதை என்னவென்று அழைப்பது?
ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட இத்தனை அழிவுக்கு பின்னரும், இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா, ஈழத் தமிழருக்கு உதவும் என்று கூறுவது பச்சைத் துரோகம் ஆகும்.
அன்றும் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. இன்றும் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. என்றுமே இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கப்போவதில்லை.
ஆனால் அம்பாந்தோட்டையில் சீனா வந்தவிட்டதால் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கும் என்று காசி அனந்தன் கூறுகிறார்.
முதலாவது, அம்பாந்தோட்டையில் சீனா செய்துள்ள முதலீட்டைவிட அதிகளவு முதலீட்டை இந்தியாவில் செய்துள்ளது.
இரண்டாவது, அருணாச்சல பிரதேசத்தில் 4 லட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கச் சுரங்கத்தை சீனா அத்துமீறி தோண்டி வருகிறது.
இவ்வாறு தனது எல்லையிலேயே சீனாவின் ஊடுருவலைக் கண்டுகொள்ளாத இந்தியா, இலங்கையில் அம்பாந்தோட்டையில் ஊடுருவல் செய்வதற்காக தமிழீழம் பெற்று தரும் என்று எப்படி காசி ஆனந்தன் நம்புகிறார்?
சீனா இலங்கையில் மட்டுமல்ல பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு என இந்தியாவின் அயல்நாடுகள் எல்லாவற்றிலும் இலங்கையில் செய்த முதலீட்டைவிட அதிக முதலீட்டை செய்துள்ளது.
இப்படி தனது அயல்நாடுகள் எல்லாவற்றிலும் சீனாவின் ஊடுருவல் இருப்பதை கண்டுகொள்ளாத இந்தியா இலங்கையில் மட்டும் ஆபத்தாக கணித்து தமிழீழம் எடுக்க உதவும் என்று காசி ஆனந்தன் எப்படி நம்புகிறார்?
காசிஆனந்தன் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்தும் இந்திய உளவு நிறுவனங்களுக்கு உதவும் அரசியலையே மேற்கொண்டு வருகிறார்.
இத்தனை நாளும் பிரபாகரன் இருக்கிறார் வருவார் என்று கூறிவந்தவர் இப்போது புலிகள் மீண்டும் வருவார் தமிழீழம் எடுப்பர் என்று கூறியதோடு 6 கோடி ரூபா தந்து உதவுமாறு தமிழக பெரிய கட்சிகளிடம் கேட்டுள்ளார்.
6 கோடி ரூபாவுக்கு தமிழீம் எடுக்க முடியுமா? வேண்டுமானால் அவருக்கு ஒரு வீடு வாங்கலாம்!

No comments:

Post a Comment