Sunday, November 20, 2016

•ஹிலாரி பதவிக்கு வந்தால் ஈழத் தமிழருக்கு நன்மை பயக்குமா?

•ஹிலாரி பதவிக்கு வந்தால் ஈழத் தமிழருக்கு நன்மை பயக்குமா?
ஒபாமா பதவிக்கு வரும்போது வைகோ நேரில் ஒபாவை சந்தித்து தான் எழுதிய புத்தகத்தை கொடுத்து அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
ஒபாமா பதவிக்கு வந்தால் ஈழத் தமிழருக்கு நன்மை கிடைக்கும் என அப்போது கூறப்பட்டது. அவ்வாறு தமிழ் மக்கள் நம்பவைக்கப்பட்டது.
ஆனால் பதவிக்கு வந்த ஒபாமா தமிழ் மக்களுக்கு எதுவும் நன்மை செய்யவில்லை. மாறாக அவருடைய காலத்தில்தான் அமெரிக்க அரசின் உதவியோடு முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தது.
அதேபோல் இப்போது ஹிலாரிக்கான தமிழர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நல்லூரில் பிரார்த்தனை செய்யப்போவதாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
ஹிலாரி இதுவரை தமிழருக்கு எதுவும் செய்யவில்லை. இனியும் தான் பதவிக்கு வந்தால் என்ன செய்வேன் என்று எதையும் கூறவில்லை. அப்படியிருக்க எதற்காக ஹிலாரிக்கு தமிழர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்?
ஒபாமா தமிழருக்கு மட்டுமல்ல தனது கறுப்பு இன மக்களுக்கே எதையும் செய்யவில்லை. அதேபோல் முதல் பெண் ஜனாதிபதி என்ற புகழ் பெறப்போகும் ஹிலாரியும் தமிழருக்கு மட்டுமல்ல அமெரிக்க பெண்களுக்குகூட எதையும் செய்யப் போவதில்லை.
எந்த அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக அதன் வெளியுறவுக் கொள்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.
இந்த உண்மை வைகோ விற்கு மட்டுமல்ல சிவாஜிலிங்கத்திற்கும் நன்கு தெரியும். இருந்தும் அவர்கள் மக்களின் கவனத்தை திருப்பி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தமது விசுவாசத்தை காட்டுகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர் “மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது” என சிவாஜிலிங்கம் அறிக்கை வெளியிட்டார். இப்போது ஹிலாரிக்காக நல்லூர் முருகனிடம் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கம் ஒரு அறிக்கைப் பிரியர். அவருக்கு எப்பவும் எப்படியாவது தனது பெயர் பத்திரிகையில் வரவேண்டும் என விரும்புவார். அதற்காக விதம் விதமாக அறிக்கை விட்டுக்கொண்டேயிருப்பார்.
நிராகரிக்கப்பட்ட இந்தியன் விசா மீண்டும் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக யாழ் இந்திய துணை தூதரின் மனதை குளிர்விக்க சிவாஜிலிங்கம் இவ்வாறான அறிக்கைகள் விடுவதாக பத்திரிகை நண்பர்கள் கூறுகிறார்கள்.
சிவாஜிலிங்கத்தின் அறிக்கைகளை இந்தியா கவனிக்கிறதோ தெரியவில்லை. ஆனால் தமிழ்மக்கள் ஒருபோதும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

No comments:

Post a Comment