Thursday, December 27, 2018

•பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா?

•பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா?
செய்தி- பொட்டம்மான் நோர்வேயில் இருக்கிறார் என்று கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
“பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழம் பெற்று தருவார்” என்று தமிழக தலைவர்களான நெடுமாறன், வைகோ போன்றவர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என்று கூறிவரும் இத் தலைவர்கள்கூட இதுவரை பொட்டம்மான் உயிரோடு இருப்பதாக கூறியதில்லை.
பிரபாகரன் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக சொன்ன நெடுமாறன் அய்யா அவர்களும் பொட்டம்மான் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக இதுவரை சொன்னதில்லை.
பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கருணா அம்மான்தான் முதன் முதலாக கூறியிருக்கிறார்.
•எப்போது இதை கூறுகிறார்?
அதுவும் புலி தலைமை எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதாக இதுவரை கூறிவந்த கருணா அம்மான் 10 வருடங்கள் கழித்து பொட்டு அம்மான் நோர்வேயில் உயிரோடு இருப்பதாக கூறுகிறார்.
• ஏன் இதை கூறுகிறார்?
மட்டக்களப்பில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டவுடன் தன்மீது அந்த பழி விழுவதை தவிர்ப்பதற்காக இதை கூறியிருக்கிறார்.
•எப்படி இதை கூறியிருக்கிறார்?
புலிகள் மீண்டும் பொட்டம்மான் தலைமையில் இயங்குவதாகவும் அவர்களே இந்த இரண்டு பொலிசாரையும் கொன்றதாக கூறுகிறார்.
பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறுவது,
(1) தமிழ் மக்களை அவர்களின் வருகைக்காக காத்து இருக்க வைக்கின்றது.
(2) தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு தலைமை உருவாவதைத் தடுக்கிறது
.
(3) தமிழ் மக்கள் இன்னொரு போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தடுக்கிறது.
(4) கோத்தபாயா “புலிகள் இருக்கிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய உதவுகிறது.
(5) மகிந்த ராஜபக்ச இதனைக் காட்டி தேர்தலில் தொடர்ந்து வெல்ல வழி செய்கிறது.
(6) ஜ.நா வில் புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள் என்றும் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த இடம் அளிக்கிறது.
(7) தமிழ் மக்கள் பல்லாயிரம் பேரைக் கொல்ல கொடுத்துவிட்டு தாங்கள் மட்டும் தப்பி சென்றுவிட்டார்கள் என பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மீது சிலர் விமர்சனம் செய்ய இடம் கொடுக்கிறது.
(8) தமது மகன், மகள், மனைவி எல்லாரும் இறந்துவிட தாம் மட்டும் தப்பிச் செல்லும் அளவிற்கு பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுயநலமானவர்களா என சிலர் கேட்டு கொச்சைப்படுத்த வைக்கின்றது.
(9) இந்தியாவில் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடை செய்ய உதவுகிறது.
(10) தமிழகத்தில் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமை தொடர்ந்து வைத்திருக்கவும் அதில் அப்பாவி அகதிகளை அடைக்கவும் உதவுகிறது.
(11) தமிழக மக்கள் இந்திய அரசுக்கு எதிராக கோபம் கொண்டுவிடாமல் தடுக்கிறது.
(12) பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது இலங்கை இந்திய அரசின் நோக்கங்களுக்கே அதிகம் துணை செய்கிது
.
(13) மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. நட்டமே அதிகம்.
26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசிமின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார்.
தமிழ் மக்களிடம் உண்மையை கூறியிருந்தால் இப்போது கருணா அம்மானால் கொலைப் பழியை பொட்டு அம்மான் மீது சுமத்தியிருக்க முடியாது அல்லவா.
மக்களை நம்புவோம்.
மக்களுக்கு உண்மைகளை கூறுவோம்.
மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள் .

No comments:

Post a Comment