Thursday, December 27, 2018

•தவறான பாதையில் சென்றுகொண்டு

•தவறான பாதையில் சென்றுகொண்டு
இலக்கை அடைய வழிகாட்டு என்றால் எப்படி காட்டுவது?
எப்ப பார்த்தாலும் சம்பந்தர் அய்யாவையும் சுமந்திரனையும் குறை சொல்வதைவிட்டு அவர் என்ன செய்ய வேண்டும் என்று கூறும்படி சிலர் கேட்கிறார்கள்.
உண்மைதான். பேய் அல்லது பிசாசை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்தபின்பு பேயை தெரிவு செய்த பின்பு கருத்து கூறுவதில் பயன் இல்லைதான்.
சம்பந்தர் அய்யா சுமந்திரன் மட்டுமல்ல யார் இந்த பாதையில் பயணித்தாலும் பேய் அல்லது பிசாசைதான் தெரிவு செய்ய வேண்டி வருமேயொழிய ஒருபோதும் இலக்கை அடைய முடியாது.
எனவே பேய் அல்லது பிசாசை தெரிவு செய்வதில் தவறு காண்பதைவிட அந்த நிலையை அடைய வழிவகுத்த பாதையில் சென்றதே தவறு என்பதை உணர வேண்டும்.
பாராளுமன்ற பாதையில் யார் பயணித்தாலும் (பேய்) ரணில் அல்லது (பிசாசு) மகிந்தவை தெரிவு செய்ய வேண்டி வருமேயொழிய ஒருபோதும் தமிழ் மக்களுக்குரிய இலக்கை அடைய முடியாது.
இன்று சம்பந்தர் மற்றும் சுமந்திரன் மீது குற்றம் காணும் கஜேந்திரகுமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போன்றவர்களும் இதே பாராளுமன்ற பாதையைத்தான் முன் வைக்கிறார்கள்.
எனவே ஒருவேளை நாளை இவர்களும் இதே பாதையில் பயணம் செய்தால் பேய் அல்லது பிசாசைதான் தெரிவு செய்ய வேண்டிவருமேயொழிய ஒருபோதும் இலக்கை அடைய முடியாது.
தமிழ் மக்களுக்கு உரிமை பெறுவதே இவர்களது இலக்கு என்றால் அதனை பாராளுமன்ற பாதை மூலம் அடைய முடியாது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும்கூட இதே நிலைதான் தமிழ் மக்கள் முன் உள்ளது.
காங்கிரஸ் அல்லது பிஜேபி என்ற பேய் அல்லது பிசாசைதான் மாறி மாறி தெரிவு செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது.
நாளை ஒருவேளை “நாம்தமிழர்” கட்சி சீமான் தெரிவு செய்யப்பட்டாலும் மத்தியில் இந்த இரண்டில் ஒரு கட்சியே ஆட்சியில் இருக்கும்.
எப்படி வடமாகாண முதலமைச்சராக விக்கினேஸ்வரன் என்ற தமிழர் இருந்தும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையோ அதேபோலத்தான் தமிழ்நாட்டில் சீமான் முதலமைச்சராக வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.
எனவே இங்கு நாம் உணர வேண்டியது இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி பாராளுமன்ற பாதை மூலம் தமிழ் மக்கள் எந்த உரிமையும் பெற்றுவிட முடியாது என்பதையே.
இதையேதான் இலங்கை கம்யுனிஸட்; கட்சி தலைவராக இருந்த காலம்சென்ற தோழர் சண்முகதாசன் தன் அனுபங்களினூடாக கூறியுள்ளார்
“இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும், ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும். அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது”
- தோழர் சண்முகதாசன்
குறிப்பு- ஆளும்கட்சியை ஒரு தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்ற போதிலும் எம்மை அடக்கும் பிற்போக்கு சக்திகளை ஒரு தேர்தல் மூலம் தூக்கியெறிய முடியாது என்பதையே கடந்த தேர்தல்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழ் மக்களுக்கு போதிக்கின்றன.

No comments:

Post a Comment